×

பிளாஸ்டிக் இல்லா நீலகிரி: பால் விநியோகத்தில் புதிய மாற்றத்தைக் கொண்டுவர நீதிமன்றம் அறிவுறுத்தல்..!

 

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளில் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரதசக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான நீதிமன்றத்திற்கான உதவி வழக்கறிஞர், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் டெட்ரா பாக்கெட்களில் விற்பனை தொடங்கி உள்ளதாக தெரிவித்தார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு விதிக்கப்பட்ட தடை, டெட்ரா பாக்கெட்களுக்கும் பொருந்தும் என தெரிவித்ததோடு, டெட்ரா பாக்கெட்கள் உபயோகப்படுத்தப்படும் கடைகளை பூட்டி சீல் வைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

அப்போது குறிக்கிட்ட நீதிமன்றத்தின் வழக்கறிஞர், நீலகிரி போன்ற மலை நகரங்களில் டெட்ரா பாக்கெட்டுகளுக்கு பதிலாக கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்த உள்ளதாக கடந்த 2013ம் ஆண்டே ஆவின் நிறுவனம் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், நீலகிரி போன்ற பகுதிகளில் பால் விநியோகம் செய்ய மாற்றுவழியை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்யும்படி ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவிட்டனர்.