ரேஷன் கார்டு வாங்க புது ரூல்ஸ்..! இனி லஞ்சத்திற்கும் சிபாரிசுக்கும் இடமில்லை!
புதிய ரேஷன் கார்டு கோரி லட்சக்கணக்கான மக்கள் காத்திருக்கும் சூழலில், உணவுப் பொருள் வழங்கல் துறையிடமிருந்து முக்கியமான மற்றும் மகிழ்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
புதிய ரேஷன் கார்டு வழங்குவதில் நிலவி வரும் காலதாமதம், லஞ்சம் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க, அரசு புதிய தொழில்நுட்ப முறையை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
வழக்கமாக, தனி சமையலறை வசதியுடன் வசிக்கும் தகுதியுடையவர்கள், பொது விநியோகத் திட்டத்தின் இணையதளம் மூலம் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இந்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ஒப்புதல் வழங்குவது நடைமுறையாக உள்ளது.
ஒவ்வொரு அலுவலகத்திற்கும் மாதந்தோறும் சராசரியாக 100 முதல் 200 விண்ணப்பங்கள் வருவதால், தகுதியான பல விண்ணப்பங்கள் நீண்ட காலமாக நிலுவையில் வைக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.
குறிப்பாக, அரசியல் சிபாரிசு உள்ளவர்களுக்கும், முறைகேடாக செயல்படுபவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படுவதாக பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வந்தது.
இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இனி “முதலில் விண்ணப்பிப்பவருக்கு முதலில் ஒப்புதல்” என்ற First Come, First Served முறையை அமல்படுத்தும் புதிய மென்பொருளை உணவுப் பொருள் வழங்கல் துறை உருவாக்கி வருகிறது.
இந்த மென்பொருளின் முக்கிய அம்சம் என்னவெனில், ஒரு அலுவலகத்தில் பெறப்படும் விண்ணப்பங்களில் யார் முதலில் விண்ணப்பித்தார்களோ, அவர்களின் விண்ணப்பத்தின் மீது ஒப்புதல் அல்லது மறுப்பு வழங்கப்பட்ட பின்னரே அடுத்த விண்ணப்பத்தை அதிகாரிகள் பரிசீலிக்க முடியும்.
அதாவது, ஒரு விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் அடுத்த விண்ணப்பத்திற்குச் செல்ல அதிகாரிகளால் முடியாது. இதன் மூலம் இடைத்தரகர்களின் தலையீடு, லஞ்சம் மற்றும் முன்னுரிமை முறைகேடுகள் முற்றிலும் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், தகுதியுள்ள பொதுமக்கள் எந்தவித அரசியல் சிபாரிசோ, பரிந்துரையோ இல்லாமல், தாங்கள் விண்ணப்பித்த வரிசை எண்ணின் அடிப்படையில் விரைவாக புதிய குடும்ப அட்டையைப் பெற முடியும்.
இந்த புதிய மென்பொருள் முறை விரைவில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
மேலும், கடந்த ஜனவரி மாதம் முதல் தமிழகம் முழுவதும் சுமார் 2.25 லட்சம் புதிய குடும்ப அட்டை விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் முதற்கட்டமாக தகுதிவாய்ந்த 46 ஆயிரம் பேருக்கு புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், புதிய ரேஷன் கார்டு தேவை அதிகமாக உள்ள பகுதிகளில் விரைவில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, விண்ணப்பங்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
இந்த அதிரடி மாற்றத்தின் மூலம், புதிய ரேஷன் கார்டு வழங்கும் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அதிகரித்து, பாரபட்சமின்றி தகுதியான அனைவருக்கும் விரைவாக குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.