நியோமேக்ஸ் வழக்கு - அசையும் சொத்துகள் ஏலம்
நியோ மேக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான நகைகள், கார், ட்ரக் உள்ளிட்ட அசையும் சொத்துகளை பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையை மையமாகக் கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் முதலீட்டுக்கு கூடுதல் வட்டி, இரட்டிப்பு பணம் வழங்குவதாக கூறி தமிழகம் முழுவதும் முதலீட்டாளர்களைச் சேர்த்தனர். பணத்தைத் திருப்பித் தராமல் முதலீட்டாளர்களை ஏமாற்றி கோடிக்கணக்கான பணம் மோசடி செய்ததாக நியோமேக்ஸ் நிறுவனங்களுக்கு எதிராக மதுரை, திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குகள் பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கூடுதல் குற்றவியல் ஆர்.முனியப்பராஜ், நியோ மேக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக ஏற்கனவே 24,000 புகார்கள் பெறப்பட்ட நிலையில், மேலும் புதிதாக 32,000 புகார்கள் பெறப்பட்டதாக கூறினார். இந்த புகார்களின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், புகாரளிக்க இன்றைய தினமே கடைசி நாள் உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் தொடர்ச்சியாக புகார்கள் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
நியோ மேக்ஸ் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா, நிறுவனத்திற்கு சொந்தமான தங்க மற்றும் வெள்ளி நகைகள், கார், ட்ரக் உள்ளிட்டவைகளை ஏலம் விடுவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனக்கூறினார். இதனையடுத்து, கார், ட்ரக் உள்ளிட்ட அசையும் சொத்துகளை பொது ஏலம் விடுவது தொடர்பாக வரும் 17ம் தேதிக்குள் அறிவிப்பு வெளியிட்டு 31ம் தேதி ஏலத்தை நடத்த நீதிபதி உத்தரவிட்டார். தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் ஏலம் தொடர்பாக அறிவிப்பு வெளியிட்ட பின்னர், ஏலம் கோரும் தொகை குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி ஏலம் தேதி குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து, வழக்கு விசாரணையை நவம்பர் மூன்றாம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.