×

கல்குவாரி விபத்து:  மீட்பு பணி நிறுத்தம்; உரிமையாளர் கைது!! 

 

நெல்லை, கல்குவாரியில்  மீட்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடைமதிப்பான்  குளம் கிராமத்தில் வெங்கடேஸ்வரா என்ற பெயரில் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது.  இங்கு நேற்றிரவு கற்களை ஏற்றும் பணி நடைபெற்று வந்த நிலையில்,  மிகப் பெரிய பாறை உருண்டு பள்ளத்துக்குள் விழுந்தது . இதில் இரண்டு லாரிகள்,  மூன்று கிட்டாச்சி ஆகியவை உள்ளே மாட்டிக்கொண்டன . அத்துடன் லாரி டிரைவர்கள் செல்வகுமார் ,ராஜேந்திரன், செல்வம், முருகன், விஜய் ஆகியோர் பாறைக்குள் சிக்கி உயிருக்கு போராடி வருகின்றனர்.

 இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த  தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். 300 அடி பள்ளம் என்பதால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது.  அத்துடன் மழை காரணமாகவும்,  இரவிலும் மீட்பு பணிகளை துரிதமாக செய்யமுடியவில்லை. இந்த சூழலில் தொடர்ந்து தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் போராட்டத்தின் அடிப்படையில் முருகன் மற்றும் விஜய் ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டனர்.  மற்றவர்களை மீட்கும் பணி  நடைபெற்று வந்தது.


இந்நிலையில் நெல்லை கல்குவாரி மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பாறைகள் சரிந்து வருவதால் மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் நெல்லை, கல்குவாரியில் பாறை சரிந்து விபத்து காரணமாக கல்குவாரியின் உரிமையாளர் சங்கரநாராயணன் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்த விபத்தில் மீட்கப்பட்ட தொழிலாளி விஜய் 3 பேர் உயிரிழந்ததாக பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது.இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை .