இலவச மின்சாரத்துக்கு பாதிப்பு இல்லாத மின்சார சட்டத் திருத்த மசோதா வேண்டும்! – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
தமிழகத்தில் விவசாயிகள், வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் மின்சார சட்டத் திருத்த மசோதாவில் திருத்தம் செய்ய வேண்டும் என்று தா.ம.க தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பன்முகப்படுத்தப்பட்ட மின்சார உற்பத்தி பிரிவுகள் அதிகம். அனல்மின் நிலையம், அணுமின் நிலையம், புனல்மின் நிலையம், சூரியமின் உற்பத்தி, காற்றாலை மின் உற்பத்தி நிலையம் என்று பலவகையில் மின் சக்தி உற்பத்தி செய்யப்பட்டு இன்று தமிழகம் மின் மிகை மாநிலமாக திகழ்கிறது.
அதோடு ஏழை எளிய மக்களின் குடிசைகளுக்கும் மற்றும் பசுமை வீடுகளுக்கும் இலவச மின்சாரமும் மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து வீட்டு மின்சார நுகர்வோருக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாகவும் தமிழக அரசு வழங்கி வருகிறது. அதற்கான மானியத்தை மாநில மின்சார ஆணையத்தின் அனுமதியுடன் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு தமிழக அரசு நேரடியாக வழங்குகிறது.
ஆகவே மத்திய அரசு தமிழக மக்களின் அடிப்படைத் தேவையான மின்சார நுகர்வுக்கு பங்கம் வராமல் மத்திய அரசின் மின்சார சட்டத்திருத்த மசோதாவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். அதோடு தமிழக அரசு மக்கள் நலன் சார்ந்த ஆக்கபூர்வமான நியாயமான பல்வேறு கோரிக்கைகளையும் மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது. அவற்றையும் பரிசீலனை செய்து நல்ல முடிவை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.