×

"ஃபர்ஹானா'' திரைப்படம்- போர்க்கொடி தூக்கும் பாஜக

 

இஸ்லாமிய கதாபாத்திரங்களை கொண்ட திரைப்படங்களை விமர்சனம் செய்து அதட்டி, உருட்டி, மிரட்டி கருத்து சுதந்திரத்தை நசுக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் எஸ் டி பி ஐ போன்ற மத அடிப்படைவாத சக்திகள் தொடர்ந்து ஈடுபடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “"ஃபர்ஹானா' திரைப்பட குழுவினரின் அழைப்பின் பேரில் முஸ்லிம் சமுதாய தலைவர்களுக்காக பிரத்தியேகமாக சிறப்பு ஏற்பாடு செய்யபட்ட நிலையில், பல சமூக தலைவர்களும் பங்கேற்ற போது எஸ்டிபிஐ கட்சி சார்பாக நானும் மற்ற நிர்வாகிகளும் கலந்து கொண்டு அப்படத்தை பார்த்தோம். படத்தில் சர்ச்சைக்குரிய வகையில் காட்சிகளோ அல்லது சமூகத்தின் மனது புண்படும்படியான வசனங்களோ இடம் பெறவில்லை" என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் அச.உமர் பாரூக் அறிக்கை விட்டிருக்கிறார்.

மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் மட்டுமே திரைப்படங்களை தணிக்கை செய்து, சான்றிதழ் வழங்குவதற்கு அதிகாரம் கொண்ட அமைப்பு. வேறு எந்த அமைப்புக்கும் அதிகாரமில்லை. இஸ்லாமிய கதாபாத்திரங்களை கொண்ட திரைப்படங்களை விமர்சனம் செய்து அதட்டி, உருட்டி, மிரட்டி கருத்து சுதந்திரத்தை நசுக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் எஸ் டி பி ஐ போன்ற மத அடிப்படைவாத சக்திகள் தொடர்ந்து ஈடுபடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதே போல், இனி ஹிந்து மத அமைப்பை சேர்ந்தவர்களும் ஒவ்வொரு படத்தையும் பார்த்து சான்றிதழ் வழங்க வேண்டும் எனில்,ஒரு படத்தை கூட திரையிட முடியாத சூழ்நிலை உருவாகாதா?


விஸ்வரூபம், துப்பாக்கி, கேரளா ஸ்டோரி என தொடர்ந்து இது போன்ற கட்டப்பஞ்சாயத்துகளை இஸ்லாமிய அமைப்புகள் செய்து வருவது மத அடிப்படைவாதம் மட்டுமல்ல, கருத்து சுதந்திரத்திற்கு எதிராக விடப்படும் சவால். ஒரு மதத்தை புண்படுத்தி எந்த திரைப்படமும் வெளியிடக்கூடாது எனும் அதே வேளையில், மூட நம்பிக்கைகளை, மத அடிப்படைவாத தீவிரவாதம் , கட்டாய மத மாற்றங்கள் போன்ற சட்ட விரோத செயல்களை திரைப்படமாக எடுப்பது படைப்பு சுதந்திரமே. அந்த உரிமையை பறிப்பதற்கு எந்த அடிப்படைவாத இயக்கத்திற்கும் உரிமை இல்லை.

நல்லெண்ணத்தின் அடிப்படையில் இந்த திரைப்படத்தை திரையிட உதவியது போன்று  காட்ட முயற்சித்துள்ள, தடை செய்யப்பட்ட மத அடிப்படைவாத தீவிரவாத பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அரசியல் அமைப் பான எஸ்டிபிஐ யின்  இந்த அறிக்கையை தமிழக அரசு சாதாரணமாக எடுத்து கொள்ளாமல், கருத்து சுதந்திரத்திற்கு விடப்பட்ட மிரட்டலாகவே கருதி, இனி இது போன்ற மத  அடிப்படைவாத அமைப்புகள் திரைப்படத்துறையினரை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளாது இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.