வருங்கால மனைவிக்கு நாமக்கல் இளைஞரின் வித்தியாசமான பரிசு! நிலவில் 1 ஏக்கர் நிலம்!
நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த அசோக் சரவணனுக்கும், மதுரையைச் சேர்ந்த ராதிகா வர்ஷினிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களின் திருமணம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வருங்கால மனைவிக்கு மறக்க முடியாத பரிசை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில், நிலவில் நிலம் விற்பதாகக் கூறப்படும் ஆன்லைன் சேவையை அசோக் சரவணன் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதற்காக அவர் சுமார் ரூ.23,000 செலுத்தி ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பணம் செலுத்திய பின்னர், நிலம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.
சில தனியார் நிறுவனங்கள் நிலவில் நிலம் விற்பதாகக் கூறி சான்றிதழ்கள் வழங்கினாலும், அவை பூமியில் உள்ள நிலப் பட்டா அல்லது பதிவு செய்யப்பட்ட சொத்து ஆவணங்களுக்கு இணையானவை அல்ல.
1967ஆம் ஆண்டின் Outer Space Treaty விண்வெளிப் பகுதிகளை தேசிய இறையாண்மைக்குள் கொண்டு வருவதைத் தடுக்கிறது. இதனால், நிலவில் ஒரு பகுதியை தனிநபர் ஒருவர் பூமியில் உள்ள நிலத்தைப் போல சட்டப்பூர்வமாக தனது பெயரில் பதிவு செய்து உரிமை பெறும் நடைமுறை தற்போது இல்லை. அதனால், ஆன்லைனில் வழங்கப்படும் “Moon Land Certificate” அல்லது இதுபோன்ற ஆவணங்களை அரசு வழங்கும் நிலப் பட்டாவுடன் ஒப்பிட முடியாது.
“நிலவில் ஒரு ஏக்கர் நிலம்” என்ற பரிசு சட்டப்பூர்வ சொத்து உரிமையை வழங்காவிட்டாலும், தனது வருங்கால மனைவிக்கு மறக்க முடியாத பரிசை வழங்க வேண்டும் என்ற அசோக் சரவணனின் முயற்சி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.