×

நல்லம்ம நாயுடு மறைவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

 

ஒய்வு பெற்ற ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை காவல் கண்காணிப்பாளர் நல்லம்ம நாயுடு மறைவுக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "முக்கிய ஊழல் வழக்குகளில் விசாரணை அதிகாரியாகவும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் எஸ்.பி., ஆகவும் இருந்து ஓய்வு பெற்ற நல்லம்ம நாயுடு அவர்கள் வயது முதிர்வு காரணமாக மறைவெய்தினார்  என்ற துயர செய்தி கேட்டு மிகுந்த மனஅழுத்தத்திற்கு உள்ளானேன். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக எந்தவித அச்சுறுத்தலுக்கும்  அஞ்சாமல் ,நியாயத்தையும், நீதியையும் நிலை நாட்டும் துணிச்சல்மிக்க, அதிகாரியாக பணியாற்றியவர் . ஊழல் வழக்குகளில் குறிப்பாக அதிமுக ஆட்சியில் ஊழல் வழக்குகளை , விசாரித்த உச்ச நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதி தீர்ப்பு வெளிவந்தவுடன் நீதி வென்றது என்று அவர் அளித்த பேட்டி இன்றும் என் நினைவில் இருக்கிறது . சமீபத்தில் தான் என் கடமை ஊழல் ஒழிக என்ற புத்தகத்தை என்னிடம் நேரில் வழங்கி, துறையில் தான் சந்தித்த சவால்கள்,  அதை எதிர்கொண்ட விதம் ஆகியவை குறித்து என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் விசாரணை அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டு,  பொது வாழ்வில் ஊழல் ஒழிப்பு என்பதை தனது நெஞ்சில் சுமந்து,  தான் பணியாற்றிய துறைக்கும், பொதுப்பணிக்கும்  இறுதி வரை விசுவாசமாக இருந்த ஒரு போராளியான காவல் கண்காணிப்பாளர் நல்லம நாயுடு அவர்களின் மறைவு பேரிழப்பாகும்.  அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவரோடு பணியாற்றிய சக காவல்துறையினருக்கும் ,எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.