×

#Breaking தகைசால் தமிழர் விருதுக்கு நல்லக்கண்ணு தேர்வு - தமிழக அரசு அறிவிப்பு!!

 

சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ள தகை சால் விருது மூத்த தலைவர் நல்ல கண்ணுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த தகைசால் தமிழர் விருது வழங்க முதல்வர் முக ஸ்டாலின் கடந்த ஆண்டு உத்தரவிட்டார். ஆண்டுதோறும் தகைசால் தமிழர் விருது பெறுபவருக்கு தலா ரூ.10 லட்சத்துக்கான காசோலையுடன் பாராட்டு சான்று வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  தமிழ்நாடு, தமிழினத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றிய பெருமைப்படுத்த புதிய விருது அறிமுகம் செய்யப்படுகிறது . தமிழ் பண்பாட்டு துறை அமைச்சர், தலைமை செயலாளரை உள்ளடக்கிய குழு விருதாளர்களை தேர்வு செய்கின்றனர்.  இந்த விருதானது ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி  தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தேர்வாகியுள்ளார்.  இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் "தகைசால் தமிழர்" என்ற பெயரில் புதிய விருது 2021 - ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான விருதாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, விடுதலைப் போராட்ட வீரராக தன் இளம் வயதை சிறைச்சாலையிலும், தலைமறைவு வாழ்க்கையிலும், கழித்தவரும், ஏழை எளிய மக்களுக்காக குரல் கொடுத்து, சமூக நல்லிணக்கத்தினையும், சுற்றுச்சூழலையும் காத்திட தொடர்ந்து பாடுபட்டுவருவதுடன், சிறந்த தன்னலமற்ற அரசியல்வாதியாகவும் பணியாற்றி, தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பை அளித்த தமிழருமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு. ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு 2022-ஆம் ஆண்டிற்கான "தகைசால் தமிழர் விருது" வழங்க தேர்வுக் குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

"தகைசால் தமிழர்" விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட  ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு, பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், வருகிற 2022 ஆகஸ்ட் திங்கள் 15-ஆம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்களால் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தகைசால் விருது  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.