"எலெக்ஷனால நீயெல்லாம் தப்பிச்சிட்டு இருக்க"- தவெக நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல்
தமிழக வெற்றிக் கழகத்தின் நாகை மாவட்ட செயலாளரான சுகுமாரன் கட்சி நிர்வாகிகளை ஒருமையில் பேசி கொலை மிரட்டல்விடுக்கும் பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வருகை தந்திருந்தார். அப்போது நிகழ்ச்சி ஏற்பாட்டிற்கான செலவு கணக்குகளை மாவட்ட செயலாளர் சுகுமாரன் ஒன்றிய அளவிலான நிர்வாகிகளிடம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் திருமருகல் ஒன்றிய கட்சி நிர்வாகிகளுக்கும் மாவட்ட செயலாளர் சுகுமாரனுக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாட்டை பொதுச் செயலாளர் ஆனந்த் சமாதானம் செய்து வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனிடையே கட்சி நிர்வாகிகள் சிலர் தமிழக வெற்றிக் கழகத்தின் நாகை மாவட்ட செயலாளர் சுகுமாரை நேரில் சந்திக்க நாகப்பட்டினம் சென்றுள்ளனர். அப்போது தன் கட்சி நிர்வாகிகளை மாவட்டச் செயலாளர் சுகுமாரன் மற்றும் அவரது மகன் ரொனால்டோ உள்ளிட்டோர் வெளிப்படையாக மிரட்டியுள்ளனர்.
பொதுசெயலாளரிடம் புகார் செய்தால் கொலை செய்து தலையை வெட்டி மூளையை ரோட்டில் வீசுவேன் என்றும், 2000 பேருடன் ஊருக்குள் நுழைந்து உங்கள் கால்களை வெட்டி கொலை செய்வேன் என்றும் கூறியுள்ளார். தேர்தல் முடிந்து கட்சி நிர்வாகி அலெக்சின் கால்களை வெட்டுவேன் என்றும், நிர்வாகியை கிள்ளி தள்ளிவிட்டு தாக்கி ரகளையில் ஈடுபடும் காட்சிகளும் வெளியாகியுள்ளது. பொதுசெயலாளரிடம் பேசிவிட்டு உன்னை கொள்வேன் என்றும் நிர்வாகியை மிரட்டியுள்ள சுகுமார், தேர்தல் முடிந்து நிர்வாகி அலெக்ஸ் என்பவரின் தலையில் வெட்டி மூளையை ரோட்டில் வீசுவேன் என்று பகிரங்க கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பிறகு வந்த மாவட்ட செயலாளர் சுகுமாரின் மகன் ரொனால்டோ தந்தைக்கு ஒன்று என்றால் சும்மா இருக்க மாட்டேன் எனவும், அனைவரையும் கொலை செய்து கல்லை கட்டி கடலில் இறக்கி விடுவேன் என்றும் மிரட்டிய வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.