×

"சமூக நீதியின் தூணாக திகழ்ந்த முலாயம் சிங் மறைவு சமூக நீதிக்கு பெரும் இழப்பு"  - அன்புமணி இரங்கல்!!

 

முலாயம் சிங் யாதவின் மறைவிற்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசம் முன்னாள் முதலமைச்சரும் , சமாஜ்வாதி கட்சி நிறுவனமான முலாயம் சிங் யாதவ் இன்று காலமானார். அவருக்கு வயது 82 . உடல் நலக்குறைவால் கடந்த வாரம் முதல் குருகுராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உத்தர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக மூன்று முறை பொறுப்பேற்று ஆட்சி புரிந்து வந்த முலாயம் சிங் யாதவ், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனராகவும் செயல்பட்டு வந்தார்.  மத்திய அமைச்சரவையில் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த இவர் 10 முறை எம்எல்ஏவாகவும்,  ஏழு முறை எம்பியாகவும் வெற்றி பெற்றவர்.  முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "சமாஜ்வாதிக் கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவின் மறைவு  பெரும் அதிர்ச்சியும், துயரமும் அளிக்கிறது. இந்தியாவில் சமூகநீதியின் தூணாக திகழ்ந்தவர். பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தவர். வட இந்தியாவின் தவிர்க்க முடியாத தலைவர். சமூக நீதியின் தூணாக திகழ்ந்த  அவரது மறைவு சமூக நீதிக்கு பெரும் இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் எனது அன்பு சகோதரர் அகிலேஷ் சிங் யாதவுக்கும், சமாஜ்வாதிக் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!" என்று குறிப்பிட்டுள்ளார்.