×

ஏசி பஸ்ஸில் எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் இலவசமாக பயணிக்கலாம்- போக்குவரத்து கழகம்

 

எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உதவியாளருடன் குளிர்சாதன பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என மாநகர் போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

சென்னையில் இயக்கப்படும் மாநகர போக்கு வரத்துக் கழகத்தின் குளிர் சாதன பேருந்துகளில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் முன்னாள் எம்எல்.சி.க்கள் கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதிக்குமாறு நடத்துநர்களுக்கு ஏற்கெனவே உத்தரவிடப் பட்டிருந்தது. ஆனாலும் இதில் பல்வேறு புகார்கள் வந்ததால் அதை சரிப்படுத்தும் வகையில் நடத்துனர்களுக்கு மீண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர்கள், பேரவை முன்னாள் உறுப்பினர்கள், முன்னாள் மேலவை உறுப்பினர்கள், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோர் தனியாகவோ, மனைவி, கணவர் அல்லது உதவியாளருடன் சட்டசபை செயலகத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையுடன் வரும்போது, அவர்களை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் குளிர் சாதன பஸ்களில் கட்டண மில்லாமல் பயணிக்க ஓட்டுநர், நடத்துநர்கள் அனுமதிக்க வேண்டும். குறிப்பாக அண்ணாநகர், மத்திய பணிமனை, பெரும்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய பணிமனைகளின் கிளை மேலாளர்கள், மேற்கூறிய உறுப்பினர்கள் மாநகர போக்குவரத்துக் கழக குளிர்சாதன பஸ்களில் பயணம் மேற்கொள்ள வரும்போது, அவர்களை கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதிக்க வேண்டும். அவர்களிடம் மரியாதையுடனும், கனிவுடனும் நடந்து கொள்வதுடன் எவ்வித புகாரும் எழா வண்ணம் பணியாற்றுமாறு அறிவுறுத்த வேண்டும் என அனைத்து கிளை மேலாளர்கள் உள்ளிட்டோருக்கு மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார்.