×

ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கிடந்த மகனை கண்ட தாய் மயங்கி விழுந்து பலி!

 

ராசிபுரம் அருகே 17 வயது சிறுவன் ஆட்டோ டிரைவரை வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கிடந்த மகனை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் மயங்கி விழுந்து பலியான பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. 


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பேளுக்குறிச்சியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகனும், ஆட்டோ டிரைவருமான கதிரவன்(42), நேற்று இரவு ஊர் பொது இடத்தில் நண்பர்களுடன் பேசிக்‌ கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த 17 வயது சிறுவன், திடீரென மறைத்து வைத்திருந்த கோடாலியால் கதிரவனின் கழுத்தில் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த கதிரவனின் தாயார் ஜானகி, சம்பவ இடத்திற்கு சென்று ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கிடந்த மகனை கண்டு அதிர்ச்சி அடைந்தோடு, கதறி அழுது சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார் 

இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஜானகியை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கும், கதிரவனை மீட்டு நாமக்கல் தனியார் மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த கதிரவனிற்கு நாமக்கல் தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஜானகியை(65) பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக பேளுக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுவனுக்கும், ஆட்டோ டிரைவருக்கும் இடையேயான முன்விரோதம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகன் வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்ட அதிர்ச்சியில் தாய் மயங்கி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.