யூடியூப் பார்த்து வீட்டில் பிரசவம்: ரத்தப்போக்கு ஏற்பட்டு திருப்பூரில் தாய் பரிதாப பலி!
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் குழந்தைசாமி. இவரது மனைவி சசிகலா (32). இந்தத் தம்பதியருக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணமாகி, தற்போது 6 வயதில் ஒரு மகள் உள்ளார். சசிகலாவின் முதல் பிரசவம் அலோபதி (ஆங்கில மருத்துவம்) அறுவை சிகிச்சை (C-Section) மூலமாக நடைபெற்றது.
அதன் பிறகு சசிகலாவுக்கு கடுமையான முதுகு வலி மற்றும் சில உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆங்கில மருத்துவத்தின் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, இரண்டாவது பிரசவத்தை இயற்கையான முறையில் வீட்டிலேயே எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் முடிவு செய்துள்ளார்.
இரண்டாவது முறையாக கர்ப்பமடைந்த சசிகலா, கர்ப்ப காலத்தின் போது ஒருமுறை கூட மருத்துவமனைக்குச் சென்று வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ளவில்லை எனத் தெரிகிறது. உறவினர்கள் பலமுறை வற்புறுத்தியும் அவர் மருத்துவமனைக்குச் செல்ல முற்றிலும் மறுத்துவிட்டார். மேலும், இணையதளத்தில் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்ப்பதற்கான வழிமுறைகளைத் திட்டமிட்டு வந்துள்ளார்.
கடந்த 23-ஆம் தேதி இரவு சசிகலாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போதும் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்ததால், யூடியூப் வழிகாட்டுதலின்படி வீட்டிலேயே பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 24-ஆம் தேதி அதிகாலை 5.42 மணியளவில் சசிகலாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.ஆனால், குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே சசிகலாவுக்கு கடுமையான மற்றும் கட்டுப்பாடற்ற ரத்தப்போக்கு (Postpartum Hemorrhage) ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் நிலைகுலைந்து சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை உடனடியாக மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவிக்காக அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூரில் உள்ள ராயல் கேர் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சசிகலா அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சசிகலா பரிதாபமாக உயிரிழந்தார்.