எல்லையில் உறவினர்களை தேடி தவிக்கும் மொரோக்கோ மக்கள்..!!
ஸ்பெயினின் கட்டுப்பாட்டிலுள்ள சியுட்டா பகுதிக்கு எல்லை கடந்து நீந்திச் செல்ல முயன்ற ஆயிரக்கணக்கான மொரோக்கோ மக்களில் காணாமற்போன தங்களது அன்பிற்குரியவர்களைப் பற்றிய தகவல்களை அறிய முடியாமல், மொரோக்கோவின் ஃபினிடெக் நகரில் அவர்களின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.
எல்லை வேலிக்கருகே கூடிய பெற்றோர், அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டோரிடம் தங்களது உறவினர்களின் புகைப்படங்களைக் காட்டிச் செய்திகளைப் பெற முயன்றனர்.
கடந்த சில நாள்களில் 60,000க்கும் மேற்பட்டோர் சியுட்டாவைச் சென்றடைந்தபோதிலும், அவர்களுள் பெரும்பாலானோர் ஃபினிடெக் நகருக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்களைத் தங்களது குடும்பத்தினரிடம் கொண்டுசேர்க்கப் பேருந்துகள் தயாராகக் காத்திருந்தன.
இச்சம்பவத்தில் 72 மரணங்கள் பதிவாகியுள்ளதாக ஸ்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இறந்தோரின் எண்ணிக்கை 130ஐ நெருங்குவதாகவும் இன்னும் பலரைக் காணவில்லை என்றும் மனித உரிமைகளுக்கான மொரோக்கோ சங்கம் தெரிவித்தது.
ஃபினிடெக்கிலிருந்து 135 கிலோமீட்டர் தொலைவிலுள்ள முலே புஸ்செல்ஹாம் பகுதியில் விவசாயியாகப் பணியாற்றும் அப்தெல்லாதீஃப், 27, சியுட்டாவுக்கு நீந்திச் செல்ல முயன்ற தம் 17 வயதுத் தம்பியின் நிலை குறித்து கவலையுறுகிறார்.
கடந்த வியாழக்கிழமை சியுட்டாவுக்குப் புறப்பட்ட தம்பிக்குத் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் தங்களைப் பிரிந்துவிட்டதாக அவருடன் சென்ற இரு நண்பர்களும் அப்தெல்லாதீஃப்பிடம் கூறினர். நண்பர்கள் இருவரும் வீடு திரும்பிவிட்ட நிலையில், தம் தம்பி இன்னமும் உயிருடன் இருக்கிறாரா என்று அப்தெல்லாதீஃப் தவிக்கிறார்.
சட்டவிரோதக் குடியேற்றத்தின் ஆபத்துகள் குறித்தும் சமூக ஊடகப் பொய்ச் செய்திகள் குறித்தும் இளையர்களிடம் மொரோக்கோ அரசு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தத் தவறிவிட்டதாக அப்தெல்லாதீஃப் குறைகூறினார்.
ஸ்பானிய எல்லை திறக்கப்படும் என்று சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகளே இளையர்களின் இந்தப் பெருந்திரளான பயணத்திற்குக் முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது..