×

அதிக வட்டி தருவதாக கூறி பிரபல நடிகையிடம் பணமோசடி : போலீசில் புகார்!

 

தன்னிடம்  ஏற்றுமதி நிறுவனம் ஒன்று பண மோசடி செய்து விட்டதாக பிரபல நடிகை சினேகா காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை சினேகா.  நடிகர்கள் கமல் ,விஜய், அஜித் ,சூர்யா, விக்ரம்  என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்த இவர் , நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து தனக்கு கிடைக்கும் பட வாய்ப்புகளில் சினேகா நடித்து வருகிறார். 

இந்த சூழலில் தன்னை ஏற்றுமதி நிறுவனத்தினர் ஏமாற்றி பணம் பெற்று விட்டதாக சென்னை கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் நடிகை சினேகா. அதில் கௌரி மினரல் சிமெண்ட் ஏற்றுமதி நிறுவனம் தன்னை முதலீடு செய்யும்படியும்,  அதன் மூலம் மாதம் தோறும் 1.80 லட்சம் வருவாய் கிடைக்கும் என்றும் கூறியிருந்தது.  அதன்படி தான் ரூ. 25 லட்சத்தை கௌரி மினரல் சிமெண்ட் ஏற்றுமதி நிறுவனத்தில் முதலீடு செய்தேன். இதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டது.

ஆனால் ஒப்பந்தத்தின்படி மாதம்தோறும் தனக்கான பணத்தை அந்நிறுவனம் அளிக்கவில்லை.  பணம் அளிப்பதாக கூறி தன்னை ஏமாற்றி முதலீடு செய்ய வைத்து ஏமாற்றிவிட்டனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று சினேகா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். சினேகா அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள சென்னை கானாத்தூர் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.