×

இன்று தீவிர புயலாக மாறும் "மோக்கா" 

 

வங்கக் கடலில் உருவான `மோக்கா' இன்று தீவிர புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 

கடந்த 9ஆம் தேதி  காலை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம்  மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று  காலை (10.05.2023) 05:30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதியில் (போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 530 கிலோ மீட்டர் தென்மேற்கே) நிலைகொண்டுள்ளது. 

இது வட-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று  மாலை அதே பகுதியில் புயலாக வலுபெறக்கூடும். இது மேலும் வட-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுப்பெற்று இன்று  (11.05.2023) காலை தீவிர புயலாகவும் நள்ளிரவு வாக்கில் மிகத்தீவிர புயலாகவும் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். 

அதன் பிறகு வடக்கு-வட கிழக்கு திசையில் திரும்பி, நகர்ந்து வருகிற 13ஆம் தேதி  முதல் சற்றே வலுக்குறைந்து 14ஆம் தேதி  காலை தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை கடக்கக்கூடும். புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 130 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.