யாருக்கெல்லாம் காய்கறி விற்பனை செய்ய கூடாது? சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்!
தமிழகத்தில் தளர்வுகள் அற்ற ஊரடங்கு இன்று முதல் வருகின்ற 31ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் காய்கறிகள், இறைச்சி கடைகள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் பொதுமக்களின் நலன் கருதி மக்கள் பயன்பெறும் வண்ணம் வீடுகளைத் தேடி காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்யும் முயற்சியை தமிழக அரசு எடுத்துள்ளது. அந்த வகையில் வாகனங்கள் மூலம் தினசரி 18 ஆயிரம் மெட்ரிக் டன் காய்கறி மற்றும் பழங்களை வினியோகம் செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. 4380 வாகனங்கள் மூலம் மக்களின் வீடுகளுக்கு சென்று காய்கறி மற்றும் பழங்களை விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் தினமும் ஆயிரத்து 160 மெட்ரிக் டன் காய்கறி மற்றும் பழங்கள் விநியோகம் செய்யப்படும் என்றும் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 2770 வாகனங்கள் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணிவரை காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை நடமாடும் வாகனங்கள் மூலம் நடைபெறும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் வாகனங்கள் மூலம் காய்கறி மற்றும் பழங்களை விற்பனையை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் தொடக்கிவைத்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர், “நடமாடும் காய்கறி விற்பனை செய்பவர்கள் அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தனிமனித இடைவெளியுடன் விற்பனை செய்ய வேண்டும் என்றும் முககவசம் அணியாதவர்களுக்கு காய்கறி விற்பனை செய்யக்கூடாது என்றும் வியாபாரிகள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.