×

மே மாதம் அமையவுள்ள திராவிட மாடல் 2.0 அரசுக்கும் இந்த உகாதி தொடக்கமாக அமையட்டும்- ஸ்டாலின் வாழ்த்து

 

உகாதிப் பண்டிகையையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “உகாதிப் பண்டிகையைக் கொண்டாடும் தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது உளம்நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் உகாதி திருநாளுக்கு அரசு விடுமுறை அளித்தது தொடங்கி, நம் மாநிலத்தில் வாழும் மொழிச்சிறுபான்மையின மக்களுக்கு என்றும் காவலரணாகத் திராவிட முன்னேற்றக் கழக அரசு திகழ்ந்து வருகிறது.

திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளைப் பேசும் தென்மாநில மக்கள் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட்டு, இந்தி ஆதிக்கத்தையும் திணிப்பையும் வீழ்த்திட வேண்டும் என்பதையும், மாநில சுயாட்சியை நிலைநாட்ட வேண்டும் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். அண்மைக் காலங்களில், வரிப்பகிர்வில் தென்னிந்திய மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதி, தொகுதி மறுவரையறையால் நாடாளுமன்றத்தில் நமது வலிமையைக் குறைக்கும் சதி, திராவிடப் பண்பாட்டை மதிக்காத ஒன்றிய பா.ஜ.க. அரசின் போக்கு ஆகியவற்றுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராடி வருகிறோம். இந்த ஒற்றுமை தொடரவும், மென்மேலும் வலுப்பெறவும் என இந்த உகாதி நாளில் உறுதியேற்போம்!

வண்ணக் கோலம், அறுசுவையும் அடங்கிய பச்சடி, விருந்துடன் எழுச்சியோடும் மகிழ்ச்சியோடும் உகாதியைக் கொண்டாடும் தெலுங்கு, கன்னட மொழிபேசும் உடன்பிறப்புகள் அனைவருக்கும் மீண்டும் எனது உகாதி நல்வாழ்த்துகள்!  வரும் மே மாதம் அமையவுள்ள திராவிட மாடல் 2.0-அரசுக்கும் இந்த உகாதி தொடக்கமாக அமையட்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.