பேச்சு, மூச்சில்லாமல் இருந்த குழந்தையை காப்பாற்றிய காவலருக்கு முதல்வர் வாழ்த்து
விருத்தாச்சலம் பெரியார் நகரில் பேச்சு மூச்சில்லாமல் இருந்த ழந்தையை காப்பாற்றிய காவலருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விருத்தாச்சலம் பெரியார் நகரில் திடீரென சரிந்து விழுந்த ஒன்றரை வயது குழந்தை பேச்சு மூச்சில்லாமல் இருந்தது. அவரது தாய் கூச்சலிடவே அருகில் இருந்த தலைமை காவலர் சரவணன் குழந்தையை தூக்கிக்கொண்டு அரை கிலோ மீட்டர் தூரம் ஓடி, அங்கிருந்த மருத்துவமனையில் அனுமதித்தார். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு குழந்தை காப்பாற்றப்பட்டது. இதன் சிசிடிவி காட்சி வெளியாகி காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. காவலர் சரவணனை நேரில் அழைத்து வெகுமதி வழங்கிய, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவரை பாராட்டினார்.
இந்த செய்தியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், “அன்பின் வழியது உயிர்நிலை. சில நாட்களுக்கு முன்னர் காவல்துறையில் பணிநியமன ஆணைகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டபோது, "காவலர் பணி மனிதநேயத்தோடு இணைந்ததாக இருக்க வேண்டும். வீரத்தின் அடித்தளம் அன்புதான்" என அறிவுறுத்தி இருந்தேன். அதனை மெய்ப்பிக்கும் வகையில் குழந்தையின் உயிரைக் காப்பாற்றியுள்ள தலைமைக் காவலர் சரவணன் அவர்களுக்குப் பாராட்டுகள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.