இலங்கையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 14 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் கடிதம்
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி ஒன்றிய அமைச்சர்
ஜெய் சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தொடர்ந்து தடையின்றி கைது செய்யப்படுவதை ஆழ்ந்த வேதனையுடன் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (29-07-2025) காலை இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் இயந்திரமயமாக்கப்பட்ட தங்களது மீன்பிடிப் படகுடன் சிறை பிடிக்கப்பட்டிருப்பதையும், மற்றொரு சம்பவத்தில் ஒன்பது மீனவர்கள் மோட்டார் பொருத்தப்பட்ட தங்களது நாட்டுப்படகுடன் இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளதையும் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவங்கள் ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த மற்றொரு சம்பவத்தின் தொடர்ச்சியாக நடைபெற்றிருப்பதையும், அச்சம்பவத்தில் நான்கு மீனவர்கள் தங்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுடன் இதேபோன்று கைது செய்யப்பட்டதையும் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இந்த மாதத்தில் மட்டும் இது நான்காவது சம்பவம் என்றும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தத் தொடர்ச்சியான கைது நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பெருத்த மனரீதியான மற்றும் பொருளாதார நெருக்கடியையும், வாழ்வில் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது, 235 மீன்பிடிப் படகுகளும், 68 மீனவர்களும் இலங்கை காவலில் உள்ளதாகக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இலங்கை அதிகாரிகளின் பிடியில் உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திட உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.