×

"யார் வயிறு எரிந்தாலும், மக்கள் மனசு நிறைய வேண்டும் என்பதுதான் எனது லட்சியம்"- மு.க.ஸ்டாலின்

 

தலைவர் கலைஞரை வளர்த்தெடுத்த திருவாரூர் மண்ணில் இருந்து திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்கான பரப்புரையை தொடங்குகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.


திருவாரூரில் பரப்புரையில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தலைவர் கலைஞரை வளர்த்தெடுத்த திருவாரூர் மண்ணில் இருந்து திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்கான பரப்புரையை தொடங்குகிறேன். தமிழ்நாடு வளர்ச்சிப்பாதையில் நடைபோட திமுக ஆட்சி தொடர வேண்டும். 2021ல் திமுக மீது நம்பிக்கை வைத்து ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தீர்கள். மத்திய அரசு, சென்னை மெட்ரோ ரயிலுக்கு நிதி தரல.. ஓசூர் விமான நிலையத்துக்கு அனுமதி தரல.. எல்லாவற்றுக்கும் மேலாக இந்தி திணிப்பை ஏற்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக கல்விக்கான நிதியை தரவில்லை. தமிழ்நாட்டை காக்கணும்னா திமுகதான் மீண்டும் ஆட்சிக்கு வரணும். நாம் போராடுவது.. திமுக வெற்றிக்காகவோ கூட்டணி வெற்றிக்காகவோ, இல்லை. தமிழ்நாட்டின் வெற்றிக்காக என்பதை மறந்து விடாதீர்கள். 

அதிமுக ஆட்சியில் சீரழிக்கப்பட்ட நிதி நிலைமையை ஓரளவு சரி செய்தவுடன் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்பட்டது. திட்டங்களிலேயே ‘Trendsetter' என்றால் அது மகளிர் உரிமை தொகைதான். அதனை நிறுத்த பாஜக முயற்சித்தது. யார் வயிறு எரிந்தாலும், மக்கள் மனசு நிறைய வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். அதனால்தான் பிப்ரவரி மாதம் ரூ.5000 வழங்கினோம். தமிழ்நாட்டை பின்பற்றி மற்ற மாநிலங்களும் உரிமைத் தொகை வழங்கிவருகின்றன. ஏழைகளின் சுருக்குப் பையில் இருந்து காசை பிடுங்கும் திட்டங்களை பாஜக அரசு கொண்டுவருகிறது. எல்லா வகையிலும் தமிழ்நாடு டாப்பில் இருப்பது பாஜகவுக்கும் அதன் அடிமை கூட்டத்துக்கும் எரிச்சலை உண்டாக்கியுள்ளது” என்றார்.