×

இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது பா.ஜ.க - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..!

 

திருச்சி ரயில்வே நிலைய நுழைவு வாயிலில், கர்தவ்ய த்வார் என்ற இந்தி வார்த்தை இடம்பெற்றதற்கு எதிராக தமிழ்நாட்டில் பல்வேறு கண்டனங்கள் எழுந்து வருகின்றன. பாஜக இன்னும் இந்த இந்தி திணிப்பு முயற்சியை கைவிடவில்லையா என்று பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான், பா.ஜ.க. அரசின் இந்தித் திணிப்பு... நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர் என்று பாஜக அரசுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது பா.ஜ.க.!

'மொழி ஒன்று - வரிவடிவம் மூன்று' எனும் வகையில் இந்திப் பெயரையே தமிழ், ஆங்கிலத்திலும் எழுதி வைக்கும் இழிவான #HindiImposition செயலில் இறங்கியுள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு!

🚫 திருச்சி மண்டல இரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் 'கர்தவ்ய த்வார்' என எழுதி வைத்துள்ளனர்.

🚫 வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் (EPFO) ஏற்கெனவே 'பவிஷ்ய நிதி பவன்' என்ற பெயரைத் திணித்து விட்டனர்.

🚫 குற்றவியல் சட்டங்களுக்கும் சமஸ்கிருதப் பெயரைத்தான் ஆங்கில வரிவடிவத்தில் எழுதுகின்றனர்.

🚫 ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகத்தின் பெயர் 'ஜல் சக்தி' ஆகிவிட்டது.

🚫 மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றத்திலும் இதே வேலையைத்தான் காட்டினார்கள்.

👉 கொட்டமும், ஆணவமும் கூடிக்கொண்டே போகிறது. தமிழர்களின் சுயமரியாதையைச் சீண்டிப் பார்க்கும் இவர்களுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும்!

📢 தமிழ், ஆங்கிலப் பெயர்களிலும் இந்தியைத் திணிக்கும் முயற்சியைக் கைவிட்டு, உடனடியாக அங்கு சரியான தமிழ்ப் பெயர்கள் இடம்பெற வேண்டும். இல்லையென்றால் தமிழர்களின் சூட்டை ஒன்றிய பா.ஜ.க. அரசு உணர வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டு உள்ளார்.