×

சனாதனத்தை பற்றி தொடர்ந்து பேசுவேன் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!

 

சனாதனத்தை ஒழிப்பதற்காக தொடங்கப்பட்ட கட்சி தான் திமுக என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிலவற்றை  ஒழிக்க வேண்டும்,   எதிர்க்க முடியாது. டெங்கு, மலேரியாவை போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என கூறினார்.   இந்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அயோத்தி சாமியார் ஒருவர் அமைச்சர் உதயநிதி தலைக்கு 10 கோடி என அறிவித்தார். சனாதனம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதேபோல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், சனாதனத்தை பற்றி தொடர்ந்து பேசுவேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நடைபெற்ற திமுக எம்.எல்.ஏ. ராஜேந்திரனின் இல்ல திருமண விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டர். இந்த விழாவில் பேசிய அவர், சனாதனத்தை பற்றி தொடர்ந்து பேசுவேன். சனாதன ஒழிப்பு மாநாட்டில் நான் கலந்துகொண்டு பேசியது ஒருநாள் செய்தி. அதை பொய்யாக திரித்து இந்திய அளவில் பேச வைத்துவிட்டார்கள். சனாதனத்தை பற்றி இப்போது பேசவில்லை. 200 ஆண்டுகளாக பேசி வருகிறோம், இனியும் தொடர்ந்து பேசுவேன். சனாதனத்தை ஒழிப்பதற்காக தொடங்கப்பட்ட கட்சி தான் திமுக. இவ்வாறு கூறினார்.