×

நிலக்கரி ஊழலுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை- தங்கமணி

 

நான் அதிமுக அமைச்சராக இருந்த காலத்தில் நிலக்கரி வாங்கியதில் ரூ.908 கோடி ஊழல் என செய்தி வெளியாகி உள்ளது, அது முற்றிலும் தவறானது என முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையின் அதிமுக முன்னாள்  அமைச்சரும் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய தங்கமணி, “நான் அமைச்சராக இருந்த காலத்தில் நிலக்கரி வாங்கியதில் ரூ.908 கோடி ஊழல் என செய்தி வெளியாகி உள்ளது. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன். ஊழல் செய்துள்ளதாக வெளியான செய்தி துளியும் உண்மையில்லை. கடந்த 3- ந் தேதி சில நாளிதழ், மற்றும் தொலைக்காட்சிகளில்  தங்கமணி விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து நிலக்கரி கொண்டு வந்ததில் ரூ.908 கோடி ஊழல் செய்து விட்டதாக செய்திகள் வெளியிட்டுள்ளனர். அதுகுறித்து விளக்கம் அளிக்கவே செய்தியாளர்களை சந்தித்துள்ளேன்.

இதுதொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு முழு விளக்கங்களை தெரிவித்துள்ளேன். 2000-ம் ஆண்டில் திமுக ஆட்சியில் தான் விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து நிலக்கரி கொண்டு வர டெண்டர் விடப்பட்டது. அதிமுக ஆட்சி காலத்தில் நீதிமன்றத்திற்கு சென்று தடை ஆணை பெற்று 2019 வரை நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டன.2016 ம் ஆண்டு நான் மின்சாரத்துறை அமைச்சராக ஆன பிறகு நீதிமன்றம் சென்று விசாகப்பட்டினத்தில் இருந்து நிலக்கரி கொண்டு வரும்  டெண்டரை கேன்சல் செய்தோம். தான் ரூ.908 கோடி ஊழல் செய்து விட்டதாக தவறாக செய்தியை வெளியிட்டிருக்கின்றார்கள். இது தொடர்பாக ஏற்கனவே நான் நீண்ட விளக்கம் கொடுத்துள்ளேன். கவர்னரிடம் மனு அளித்துள்ளனர்.லஞ்ச ஒழிப்புத்துறையினரால் விசாரிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊழலுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.

வழக்குப்பதிவு செய்யப்பட்டது 2001 - 2019 வரை என போடப்பட்டுள்ளது. அவர்கள் தெரிந்து போட்டார்களா ? அல்லது தெரியாமல் போட்டார்களா ? இது முதலமைச்சரின் கவனத்திற்கு சென்றதா என தெரியாது. ஏனென்றால் 2006 - 2011 வரை திமுக ஆட்சி. அப்போது மின்சாரத்துறை அமைச்சராக திரு. ஆற்காடு வீராசாமி இருந்தார். திமுக ஆட்சியில் இருந்ததை மறந்து விட்டு ஊழல் என லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளதா? அல்லது முதலமைச்சரின் கவனத்திற்கு சென்றதா? என தனக்கு தெரியவில்லை. 2011 - 2016  ஆம் ஆண்டு என்று தன் மீது குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். அதில் துளியும் உண்மையில்லை என்பதை மீண்டும் மறுப்பு தெரிவிக்கின்றேன்.

பொய் செய்தி வெளியிட்ட பத்திரிகை மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வேன். நீதிமன்றம் சென்று போராடுவேன்” என்றார்.