×

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உலக சிக்கன நாள் வாழ்த்து!

 

தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உலக சிக்கன நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகச் சிக்கன நாள் அக்டோபர் 30.10.2023 அன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுவதை குறித்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவில் 1985ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 30ஆம் நாள் உலக சிக்கன நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வாழ்வில் தேவையற்ற ஆடம்பர செலவுகளைத் தவிர்த்து, சிக்கனமாக வாழ்ந்து, சேமிப்பையும் மேற்கொண்டு வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்ப்பதையே இந்த உலக சிக்கன நாள் வலியுறுத்துகிறது. 

"அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்" என்று அய்யன் வள்ளுவப் பெருந்தகை கூறியுள்ளார். ஒருவன் தனது செல்வத்தின் அளவை அறிந்து அதற்கு ஏற்றபடி வாழாவிடில் அவன் வாழ்க்கை. செல்வம் இருப்பது போலத் தோன்றினாலும் செல்வம் இழந்து வாழ்க்கை கெடும். எனவே சிக்கனமும் சேமிப்பும் மிக அவசியம். இந்த வகையில், சாமானிய மற்றும் நடுத்தர மக்களுக்கு அஞ்சலகங்கள் மூலம் செயல்படுத்தப்படும் சிறுசேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பு அரணாக அமைந்துள்ளன. இவை சேமிப்பவர்களின் குடும்பத்திற்குத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும், எதிர்பாராச் செலவுகளை எதிர்கொள்வதற்கும் பயன்படுகின்றன.