×

ஆதவ் அர்ஜூனா நிழல் முதலமைச்சரா?- சிவசங்கர் காட்டம்

 

த.வெ.க-விற்கும் பா.ஜ.க-விற்கும் ஒரு இணக்கமான உறவு நிலவி வருகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது என திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சிவசங்கர், “சட்டமன்றத்தில் நான் பேசியது நேரலையாக வரும் என்று நினைத்தேன்.. ஆனால் வரவில்லை.. ஏற்கனவே உதயநிதி பேசிய போது அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் முதலமைச்சர் அமைதியாக இருந்தார்.. இதை மக்கள் அனைவரும் பார்த்தார்கள்.. அதனால் தான் இன்றைய தினம் நேரலை செய்யப்படவில்லை. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு முதலமைச்சரால் பதிலளிக்க முடியாததால்தான் நேரலை துண்டிக்கப்பட்டதாக கருதுகிறோம். எதிர்க்கட்சி தலைவர் பேசுவதை நேரலையில் இணைக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து துறை அமைச்சர் முதலமைச்சர்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால், காவல்துறைக்கு நிழல் அமைச்சர் போல ஆதவ் அர்ஜூனா பேசி வருகிறார். மாற்றம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் அந்த மாற்றத்தை செய்யவில்லை. 

இந்த ஆட்சிக்கு 6 மாத கால அவகாசம் அளிப்பதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியது புதிய மக்கள் நலத் திட்டங்களுக்குதான். மக்கள் வீதிக்கு வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அன்றாட சட்டம், ஒழுங்கு பிரச்சனைகளுக்குக் கூட முதலமைச்சர் விஜய் வாய் திறப்பதில்லை. பேரவையில் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் டிவிட்டரில் பதிலளிக்கின்றனர். ஆளுநர் உரை ஒரு சரித்திர நிகழ்வு என ஆளுநரே பதிவு செய்கிறார். ஆளுநர் உரை குறித்து, இது ஒரு இணக்கமான நிகழ்வு என சபநாயகர் தெரிவிக்கிறார். த.வெ.க-விற்கும் பா.ஜ.க-விற்கும் ஒரு இணக்கமான உறவு நிலவி வருகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது” என்றார்.