சுந்தரா டிராவல்ஸ் பேருந்துகளுக்கு புதிலாக புதிய பேருந்து இயக்கம்- அமைச்சர் சிவசங்கர்
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் ஓடிய சுந்தரா டிராவல்ஸ் பேருந்துகளுக்கு பதிலாக, தற்போது புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் 8 கோடியே 53 லட்சம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளையும், 22 லட்சம் மதிப்பில் நான்கு ஏரிகளை புனரமைக்கும் பணிகளையும் போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர்களுக்கான 3200 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் பெறப்பட்டு எழுத்துத் தேர்வு இந்த மாதம் நடைபெற உள்ளது. தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெறும். அதன் பிறகு அவர்கள் பணியப்படுத்தப்படுவார்கள்” என்றார்.
அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை சுந்தரா டிராவல்ஸ் என எடப்பாடி பழனிச்சாமிவிமர்சனம் குறித்த கேள்விக்கு, “எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தவர் அவர் முதலமைச்சராக இருந்த போது புதிய பேருந்துகள் வாங்காத காரணத்தினால் தான் பழைய பேருந்துகள் ஓடியது. தற்போது எடப்பாடி பழனிச்சாமி ஓட்டக்கூடிய சுந்தரா டிராவல்ஸ்க்கு எப்படி அவர் ஓனரோ, அதேபோல் ஏற்கனவே ஓடிய சுந்தரா டிராவல்ஸ்க்கும் அவரே ஓனர். அந்த சுந்தரா டிராவல்ஸ் பேருந்தை மாற்றுவதற்காகவே முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுத்து நிதி ஒதுக்கி 11 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்குவதற்கு அனுமதி வழங்கி 4500 பேருந்துகள் மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 15 ஆண்டுகள் ஓடிய பேருந்துகள் அகற்றப்பட்டு, அந்த இடங்களில் இந்த புதிய பேருந்துகள் ஓடிக்கொண்டிருக்கிறது. இதை பேருந்தில் பயணிக்க கூடிய அனைவரும் பார்க்கலாம். மஞ்சள் நிற பேருந்துகள் நகர்ப்புறங்களிலும், நீல நிறப் பேருந்துகள் கிராமப்புறங்களிலும் ஓடிக்கொண்டிருப்பதை மக்கள் பார்க்கலாம். அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கும் உரிய புதிய பேருந்துகள் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் போக்குவரத்து துறை மிகப்பெரிய மாற்றத்தை கண்டுள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் சிவசங்கர், “ஓரணியில் தமிழ்நாடு இயக்க பரப்புரையின் மூலம் இதுவரை ஒரு கோடியே 35 லட்சம் பேர் திமுகவில் இணைத்துக் கொண்டுள்ளார்கள். முதலமைச்சருடைய நல்லாட்சிக்கு சான்றாக நாங்கள் போகின்ற இடத்தில் வரவேற்பு அளித்து அவர்களே திமுகவில் இணைத்து கொள்கிற காட்சியை பார்க்க முடிகிறது. எனவே தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாடு திறன்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது. உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மக்கள் திரண்டு வந்து அவர்களின் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து வருகின்றனர். 15 துறைகளின் மூலமாக 45 சேவைகள் வழங்குவதற்கு முகாம்கள் மூலம் விண்ணப்பம் பெறப்படுகிறது. வீடு தேடி வரும் அரசு என்று முதலமைச்சர் கூறியது போல மக்களே திரண்டு வந்து மனுக்களை வழங்கி வருகிறார்கள். இந்த முகாம் நடப்பது குறித்து ஒவ்வொரு வீடாகச் சென்று மக்களுக்கு தெரிவித்து அவர்கள் தெரிவித்த கருத்துக்களை இதற்கான செயலியில் உள்ளீடு செய்கின்றபோது அவர் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் இது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது மிகப்பெரிய வெற்றிகரமான நடவடிக்கையாக அமைந்துள்ளது
தமிழ்நாட்டின் மிகப்பெரிய கட்சி தங்களுடன் கூட்டணி சேருவார்கள் என்ற எடப்பாடி பேச்சு குறித்த கேள்விக்கு தமிழ்நாட்டின் நிலையை அறிந்து தான் பேசுகிறாரா? இல்லையா? என்பது தெரியவில்லை. தமிழ்நாட்டின் மிகப்பெரிய கட்சி திராவிட முன்னேற்ற கழகம். அதற்கு அடுத்தபடியாக அதிமுக. இந்த இரண்டு கட்சிகளை தாண்டி எந்த கட்சியை பெரிய கட்சி என்று சொல்ல வருகிறார் என தெரியவில்லை. அதிமுகவை விட பெரிய கட்சி இருக்கிறது என்பதை அவர் சொல்ல வருகிறாரா. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக கட்சியின் தரத்தை தாழ்த்திக் கொள்கிறாரா என்பதுதான் தற்போது சந்தேகமாக உள்ளது. அவர் பேசுகின்ற போது என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து பேச வேண்டும். புதிதாக வருகின்ற பெரிய கட்சி என இவரே சொல்கிறார் என்றால் அதிமுகவுடைய சூழலை அவரே குறைத்து மதிப்பிடுகிறார் என்ற சந்தேகம் தான் எழுகிறது” என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.