“சிபிஐ சம்மன் அனுப்பியது ஆச்சரியமாக உள்ளது; விசாரணைக்கு ஒத்துழைப்பேன்”- செந்தில்பாலாஜி
சிபிஐ சம்மன் அனுப்பியது ஆச்சரியமாக உள்ளது, விசாரணைக்கு ஒத்துழைப்பேன் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
கரூர் மாவட்டம், ஈரோடு சாலையில் அமைந்துள்ள கோதை நகர் பகுதியில், சுமார் 64 ஆயிரம் சதுரடி பரப்பளவில் இந்த மினி டைடல் பூங்கா அமைய உள்ளது. 38 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உருவாகும் இந்த பிரம்மாண்ட திட்டத்திற்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, “திராவிட மாடல் ஆட்சி 2.0 மீண்டும் அமைந்தவுடன் கரூரில் நிச்சயமாக விமான நிலையம் கொண்டுவரப்படும். கரூரில் ஒரு இயக்கம் நடத்திய நிகழ்ச்சி தொடர்பாக சிபிஐ எனக்கு சம்மன் அனுப்பியுள்ளது, ஆச்சரியமாக உள்ளது. இருப்பினும், அவர்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன். விசாரணை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். மருத்துவமனை மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்கலாம். சிலர் என் மீது விமர்சனம் வைப்பது தேவையற்றது. தேர்தல் வருவதால் சிலர் பொட்டு பாக்கெட்டுகளைப் பரிசாக வழங்கி வருகிறார்கள். விஜயபாஸ்கர் வீட்டில் சட்ட விரோதமாக மணல் இருந்த நிலையில் மணல் திருட்டில் ஈடுபடுபவர்களே மணல் திருட்டை பற்றி பேசுவது சரியா?. இதற்கு வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பார்களா. திருடனே திருடிவிட்டு திருடன், திருடன் என்று கூறுவது சரியா? கடந்த 2016 தேர்தலில் முறைகேடாக வெற்றி பெற்றவர்கள் குறித்து மக்கள் அறிவார்கள். வரும் தேர்தலில் கரூர் மாவட்டத்தின் 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னம் மீண்டும் வெற்றி பெற்று சாதனை படைக்கும்” என விமர்சித்தார்.