பொங்கலுக்கு முன்பாகவே கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும்- சேகர்பாபு
கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை பொங்கலுக்கு முன்பாகவே பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழக அரசு சார்பில் தென்னக ரயில்வேக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை இராயபுரம் கல்மண்டபம் பேருந்து நிறுத்தத்தில் ரூபாய் 1.32 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள புதிய குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்திற்கான பூமி பூஜையை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். தொடர்ந்து வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் நினைவிடத்தில் உள்ள முதல்வர் படைப்பகம் முன்னேற்றப் பணிகள் குறித்து அவர் ஆய்வு செய்தார்.
இதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, “கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த கால ஆட்சியாளர்களால் போதிய திட்டமிடல் இல்லாமல் தொடங்கப்பட்டது. பேருந்துகளின் எண்ணிக்கை, பயனாளிகளின் எண்ணிக்கையை திட்டமிடாமல் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தாமல் பணிகளை தொடங்கினர். அதனைத் தொடர்ந்து திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பயணிகளுக்கான கழிப்பிடம் ஓட்டுநர்களுக்கான தங்குமிடம் கடைகள் உணவகங்கள் பூங்காக்கள் இணைப்புச் சாலைகள், மழைநீர் வடிகால்கள் என பல்வேறு கட்டமைப்புகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மேம்படுத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ரூபாய் 20 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தென்னக ரயில்வே பொது மேலாளர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்து ஜனவரி மாதம் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறியுள்ளது. ஆனால் தமிழ்நாடு அரசு சார்பில் மேலும் அழுத்தம் கொடுக்கப்பட உள்ளது. ஜனவரி மாதத்தின் தொடக்கப் பகுதியிலேயே கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை திறந்து வைத்தால் பொங்கலுக்கு ஊருக்கு செல்லும் பொது மக்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும் என அழுத்தம் கொடுக்கப்பட உள்ளது. இன்னும் சில தினங்களில் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்ய உள்ளோம்” என்றார்.