×

கோயில் நடை அடைப்பின்போது சேமிக்கப்படும் மின்சாரம் மின்வாரியத்துக்கு வழங்கப்படும்- சேகர்பாபு

 

சென்னை வடபழனி முருகன் கோயிலில் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 91.25 KWP மின் உற்பத்தி திறன் கொண்ட சூரிய ஒளி மின் தகடு(solar panel) நிலையத்தை இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “திருக்கோயில் முழுமைக்கும் தேவைப்படும் மின் தேவையை சோலாரின் மூலம் பெறப்படும் மின்சாரம் வாயிலாக பூர்த்தி செய்யும் வகையில், இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தனியார் வங்கியின் சமூக பொறுப்பு நிதியில் இருந்து இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் திருக்கோயில் மின் தேவை முழுவதும் சூரிய மின் சக்தியால் பெரும் வகையில் அமைக்கப்பட்ட முதல் திருக்கோயிலாக வடபழனி திருக்கோயில் அமைந்துள்ளது.


திருக்கோயிலின் நடை அடைப்பின்போது சேமிக்கப்படும் மின்சாரம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கப்படும். இதன் மூலம் பெரும் தொகை கோவிலிற்கு கிடைக்கும். இதனை தொடர்ந்து மற்ற திருக்கோயில்களிலும் சோலார் அமைப்பதற்கான நடவடிக்கையை துறை சார்பில் எடுக்கப்படும். இந்து சமய அறநிலைய துறையில் சமகாலத்திற்கு ஏற்றது போல, கோவில் பிரசாதங்கள் உள்ளிட்டவை இணையவழியில் கட்டணம் செலுத்தி வீடுகளுக்கே வரவழைத்து பெரும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் இந்தியா முழுவதிலும் எங்கிருந்து வேண்டுமானாலும் பிரசாதத்தை இணையவழியில் வீடுகளுக்கே வரவழைத்து பெற்று கொள்ளலாம்.

திண்டுக்கல் பழனி முருகன் கோயிலிற்கு அதிக கூட்டம் வருவதால், மலை ஏறுவதற்கு ரோப் கார் உள்ளிட்டவைகளில் பயணம் செய்ய நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. முதியவர்களுக்கு தனி வரிசை இருந்தாலும், விடுமுறை, மற்றும் விழா நாட்களில் அதிக கூட்டம் வருகிறது. இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகமாகி வருகிறது. அதிக மக்கள் கூட்டம் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்க்க, கூடுதலாக புதிய ரோப் கார் பாதை ஏற்படுத்த திட்டமிட்டு வருகிறோம்” என தெரிவித்தார்.