ஜனநாயகன் படத்துக்கு விஜய் குரல் கொடுக்காததை வைத்தே அவருடைய தைரியத்தை தெரிந்து கொள்ளலாம் - ரகுபதி
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மைதானத்தில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் புகையில்லா போகி விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னதுரை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, “சீமான் எதுக்கு வேண்டும் என்றாலும் பொங்கல் வைப்பார். திராவிடம் இணைந்தது தான் தமிழ்நாடு. அதனால் திராவிட பொங்கல் கொண்டாடி வருகிறோம். மகாராஷ்டிராவில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தனக்கு ஒரு ஆபத்து என்று வந்தவுடன் தமிழர்கள் மீது தாக்குதல் என்று சொல்லிவிடுவார். அண்ணாமலை பேசியது அங்கேயும் புரியவில்லை, இங்கேயும் புரியவில்லை. எங்களுக்கு யாராலும் நெருக்கடி கொடுக்க முடியாது. அதிமுக- பாஜக கூட்டணியை பலப்படுத்தவும் முடியாது. அவர்கள் போகப்போக தேய்ந்து கொண்டே போகுமே தவிர பலப்படுத்த முடியாது. எடப்பாடி பழனிச்சாமி புதிய கட்சி கூட்டணி இணையும் என்று கூறுகிறார் நிறைய கட்சி உருவாகிறது லெட்டர் பேட் கட்சிகள் அந்த கட்சிகள் எல்லாம் வரும் என்று கூறி இருப்பார். ஜனநாயகனுக்கு பலரும் குரல் கொடுத்து இருக்கக்கூடிய நிலையில் அது குறித்து சம்பந்தப்பட்ட நடிகர் விஜய் குரல் கொடுக்காததை வைத்து அவருடைய தைரியத்தை தெரிந்து கொள்ளலாம்.
1965 நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் பராசக்தி. அன்றைய நிகழ்வுகள் இன்று எதிர்ப்பு போராட்டம். இந்தி திணிப்பை எதிர்த்து தமிழ்நாட்டில் மாணவர் பட்டாளம் துணிந்து எழுந்து நடத்திய போராட்டம். அப்போதுள்ள காங்கிரஸ் கட்சி வேறு தற்போதுள்ள காங்கிரஸ் கட்சி வேறு. காங்கிரஸ் திமுகவினருக்குள் எழுந்துள்ள விமர்சனத்தால் கூட்டணிக்குள் எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாது, அவர் அவர்கள் அவர்களது விருப்ப கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒன்றிய அரசுக்கு வந்த வருமானத்தை விட தற்போது பாஜக ஆட்சி காலத்தில் அதிக அளவு வந்துள்ளது. அதில் சிறு துளியை மட்டுமே தந்துள்ளனர். நிச்சயமாக அதிகமாக தொகையை அவர்கள் தரவில்லை. ஒன்றியத்தில் பாஜக ஆட்சியில் இருக்கும் போது கிடைத்த நிதி தற்போது எங்களுக்கு கிடைக்கவில்லை. ஐ மு கூட்டணி ஆட்சியின் போது தான் தமிழ்நாட்டிற்கு சாலை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் கிடைத்தது. அமித்ஷா, மோடி அடுத்தடுத்து வருகை தந்தாலும் எந்த மாற்றமும் ஏற்படுத்தாது அவர்களுக்கு ஏமாற்றம் தான் ஏற்படுத்தும்” என்று தெரிவித்தார்.