×

“மத்திய அரசால்தான் போதை பொருள் அதிகரித்து வருகிறது; குஜராத்தில் தான் உற்பத்தி அதிகம்”

 

தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் போன்றவை அதிகளவில் நடைபெற்று வருவதாகவும், மத்திய அரசு இதனை தடுக்க முழுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறார். காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் கூட்டத்தை முதல்வர் கூட்டி போதை பழக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். போதைப் பொருட்களை தடுக்க மாநில அரசு மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது. மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குஜராத்தில் அதிக அளவில் போதைப் பொருள்கள் கிடைக்கிறது. குஜராத்தில் துறைமுகம் தனியார் வசம் உள்ளது. இதன் மூலம் போதைப் பொருள் கடத்தல் வேகமாக நடக்கிறது. 

வெளிநாடுகளில் இருந்து போதைப் பொருட்கள் அதிக அளவில் கொண்டு வருகின்றனர். எனவே போதைப் பொருள் தடுப்புக்கு மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக முத்ரா, விஜயவாடாவில் உள்ள துறைமுகத்தில் இருந்து தமிழகத்திற்கு அதிக அளவில் போதைப் பொருள்கள் வருகிறது. இதனை ஒன்றிய அரசு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் பலமுறை வலியுறுத்தியுள்ளார். ஒன்றிய அரசு போதைப் பொருட்களை தடை செய்ய முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கடத்தலில் யாரெல்லாம் உள்ளனர் என்று கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதன் மூலம் போதைப் பொருட்களை தடுக்க முடியும். கடந்த 10 ஆண்டுகளில் 952.1 டன் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 152 டன் போதை பொருள் கடந்த  ஒரே ஆண்டில் திமுக பறிமுதல் செய்துள்ளது. மத்திய அரசால் தான் போதைப் பொருள் அதிகரித்து வருகிறது, குஜராத்தில் தான் போதைப்பொருள் அதிக அளவில் உற்பத்தி ஆகிறது. மத்திய அரசு இதுவரை போதைப் பொருள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதனால்தான் தமிழகத்தில் போதை பொருள் அதிக அளவு பரவி உள்ளது” எனக் கூறினார்.