×

கள்ளச்சாராயம் விற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் பொன்முடி 

 

கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பம் என்ற கிராமத்தில் நேற்று கள்ளச்சாராயம் குடித்த 16 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக 16 பேரும் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். முண்டியபாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துமனைகளுக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டனர். இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய மூன்று பேர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளார் ஸ்ரீநாதா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் எக்கியார் குப்பம் கிராமத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கள்ளச்சாராய வியாபாரி அமரன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் கள்ளச்சாராயம் விற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் வருத்தத்திற்குரியது. கள்ளச்சாராயம் விற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் கள்ளச்சாராயம் விற்றதாக அமரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. போதை பொருட்களை ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவ்வாறு கூறினார்.