குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் - எச்சரிக்கை வாசகங்களை அச்சடிக்க ஐகோர்ட் உத்தரவு
குடிநீர் பாட்டில்களிலும் மைக்ரோ பிளாஸ்டிக் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்த நிலையில், அதுகுறித்த எச்சரிக்கை வாசகங்ககளை இடம்பெறச் செய்யவேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொப்புள்கொடியில் மைக்ரோ பிளாஸ்டிக் எனும் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கண்டறியப்பட்டதாக வெளியான செய்தியின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு தாமாக முன்வந்து வழக்கை எடுத்துக்கொண்டது. இந்த வழக்கு நீதிபதிகள் என் .சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய சுகாதார துறை சார்பில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில், உணவு பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் பொதிந்து விற்பனை செய்வது தொடர்பாக ஏற்கனவே வழிகாட்டு விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பிளாஸ்டிக் நுண்துகள்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து லக்னோ, கொச்சி, பிலானி மூன்று இடங்கக்களில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிமாச்சல பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் குடிநீர் பாட்டில்களின் மாதிரிகளில் சேகரிக்கப்பட்டு, ஆய்வு செய்தபோது, அவற்றில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதேபோல பிளாஸ்டிக் பாக்கெட்களில் அடைத்து விற்கப்படும் உப்பு, சர்க்கரையிலும் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பதாக தெரியவந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், மைக்ரோ பிளாஸ்டிக்கால் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், விலங்குகளுக்கும் தீங்கை ஏற்படுத்தக்கூடியது; அன்றாடம் பயன்படுத்தும் குடிநீர் பாட்டில் களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் கண்டறியப்பட்டுள்ளதால், அவற்றில் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறச்செய்ய வேண்டுமென குடிநீர் பாட்டில் உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். ஆய்வுகள் ஆரம்ப நிலையில் இருப்பதால், எச்சரிக்கை வாசகங்களை இடம்பெறச் செய்தால் மக்களிடையே குழப்பம் ஏற்படும் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆய்வுகளை விரைந்து முடிக்க அறிவுத்திய நீதிபதிகள், அதுவரை எச்சரிக்கை வாசகங்களை ஓட்டவேண்டுமென குடிநீர் பாட்டில் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.