×

எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி  தமிழகமெங்கும் தெருமுனைப் பிரச்சாரக்கூட்டங்கள் - டிடிவி தினகரன் பங்கேற்பு

 

எம்.ஜி.ஆர்  பிறந்த நாளை முன்னிட்டு தமிழகமெங்கும் தெருமுனைப் பிரச்சாரக்கூட்டங்கள் நடைபெறும் என்று தினகரன் அறிவித்துள்ளார்.

இதுக்குறித்து  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் இதயக்கனி, தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் ஏழைகளின் ஏந்தல், பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106வது பிறந்தநாள் வரும் 17.01.2023 செவ்வாய் கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் காலை 11 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகம் எதிரில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருக்கிறார்கள்.

இதனைத்தொடர்ந்து, 21.01.2023 அன்று செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெறவுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் பிறந்த தினப் பொதுக்கூட்டத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்கள். இந்நிகழ்ச்சிகளில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, ஊராட்சி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  மேலும், 18.01.2023 முதல் தமிழகம், புதுச்சேரி மற்றும் கர்நாடகத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாளையொட்டி தெருமுனை பிரச்சார கூட்டங்களையும், ஏழை எளியோருக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளையும் மாவட்ட கழக செயலாளர்களுடன், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மன்றம் மற்றும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இளைஞர் அணியின் நிர்வாகிகள் ஒருங்கிணைந்து சிறப்புற நடத்திட வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.