×

எதிர்க்கட்சிகளுக்கு வேறு வேலையில்லை- வைகோ கண்டனம்

 

சிங்கப்பூர் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் வெற்றியுடன் திரும்புவார் என மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழர் தந்தை என அழைக்கப்படும் சி.பா. ஆதித்தனாரின் 42 வது நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை புதிய பஸ் நிலையம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மதிமுக மாவட்ட செயலாளர் நிஜாம் தலைமை தாங்கினார். இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு சி.பா. ஆதித்தனார் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாருக்கு மதிமுக சார்பில் புகழஞ்சலி செலுத்துகிறோம். சிங்கப்பூர் சென்று வக்கீல் படித்துவிட்டு லண்டனில் படித்தபோது பத்திரிக்கை நிருபராக மாறி அதன் பிறகு பெரும் பொருள் ஈட்டி வழக்கறிஞராக தமிழகத்திற்கு வந்தவர் தமிழர் தந்தை சிபா ஆதித்தனார். தமிழனுக்காக பத்திரிக்கை தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் முதன் முதலாக மாலை முரசு நாளிதழை தொடங்கினார். அதன் பின்னர் தினத்தந்தி பத்திரிகையை தொடங்கினார். தற்போது பங்களா முதல் குடிசைவாசி வரையிலும் தினத்தந்தியை படிக்கின்றனர். காலை எழுந்தவுடன் தந்தி அதன்பின் காபி என்ற நிலைமையை கொண்டு வந்து பத்திரிக்கை புரட்சியை ஏற்படுத்தியவர் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார்.

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை மக்கள் மனதில் பதிய வைத்தவர். ஒவ்வொரு நாளும் திருக்குறளை வாசித்து தான் சட்டப்பேரவையை தொடங்க வேண்டும் என்ற மரபை ஏற்படுத்தியவர் தமிழர் தந்தை சிபா ஆதித்தனார். தமிழ் ஈழம்  வேண்டும் என்பதற்காக குரல் கொடுத்தவர். அவரது புகழ் என்றும் நீடித்து நிலைக்கும்.  வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் ஸ்டாலின் குறித்து விமர்சனம் செய்யும் எதிர்க்கட்சிகளுக்கு வேறுவேலை இல்லை. ஸ்டாலின் வெற்றியோடு தமிழகம் திரும்புவார். மதுவிலக்கு வேண்டும் என்று தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டேன். தற்போது திமுக அரசு 500 மதுக்கடைகளை மூட முடிவு செய்துள்ளது. அதிமுக ஆட்சியில் தான் கள்ளச்சாராயம் தமிழகத்தில் பெருக்கெடுத்து ஓடியது. நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.