ஸ்ரீபெரும்புதூர் ஹூண்டாய் மொபிஸ் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து
இருங்காட்டுக்கோட்டை ஹூண்டாய் மொபிஸ் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் அமைந்துள்ள பிரபல ஹூண்டாய் மொபிஸ் (Hyundai Mobis) கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி பொருட்கள் தீக்கிரையாகியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹூண்டாய் கார்களுக்கான டேஷ்போர்டு (Dashboard) மற்றும் ஏர்பேக் (Airbag) தயாரிக்கும் முக்கிய பிரிவில் இந்த தீ விபத்து திடீரென ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களிலேயே, அங்கு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய மூலப்பொருட்களால் தீ மளமளவென தொழிற்சாலையின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் அடர்ந்த கரும்புகை சூழ்ந்து, வானளவு உயர்ந்து காணப்பட்டது. இக்கோர விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.
விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன், ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை மற்றும் ஒரகடம் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 6-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து பல மணி நேரமாகப் போராடி, தீ மேலும் பரவாமல் தடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்டவுடன் தொழிற்சாலையில் பணியாற்றும் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த கோர தீ விபத்தில், உற்பத்தி செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான டேஷ்போர்டுகள் மற்றும் ஏர்பேக்குகள் முற்றிலும் எரிந்து நாசமாகின. சேத மதிப்பு ரூ.100 கோடியைத் தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் மின் கசிவா அல்லது வேறு ஏதேனும் குறைபாடா என்பது குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.