×

திருமண மண்டபங்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் - சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்!!

 

திருமண மண்டபங்களுக்கு சில கட்டுப்பாடுகளை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில்  2,731 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 55 ஆயிரத்து 587 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 805 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது.   குறிப்பாக சென்னை மாநகராட்சியில் கொரோனா தினசரி பதிவானது ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் சென்னை மாநகராட்சியில் தொற்றை கட்டுப்படுத்த பல துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் திருமண நிகழ்வுகள் தொடர்பான தகவல்களை முன்கூட்டியே மண்டப உரிமையாளர்கள் தெரிவிக்க வேண்டும். திருமண மண்டபங்கள், கோவில்கள்,  ஹோட்டல்களில் நடைபெறும் திருமண நிகழ்வுகளையும் முன்னரே தெரிவிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவலை covid 19.chennai corporation.gov.in என்ற இணையதளத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும்.  பொதுமக்கள் வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் , முடிந்தால் இரட்டை முக கவசம் அணிந்து வெளியே செல்லலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.