நாளை மார்கழி அமாவாசை 2025 : செல்வமும், வெற்றியும் குவிய இந்த 5 பொருட்களை தானம் செய்யுங்க..!
விரதங்களில் அமாவாசை விரதத்திற்கு தனி சிறப்பு உண்டு. மற்ற விரத நாட்கள் அனைத்தும் ஏதோ ஒரு தெய்வத்திற்குரியதாக மட்டுமே இருக்கும். ஆனால் அமாவாசை விரதம் என்பது தெய்வங்களையும், முன்னோர்களையும் வழிபட்டு, நம்முடைய பாவங்கள், சாபங்களில், அதனால் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுபடுவதற்கு ஏற்ற நாளாகும். அமாவாசை விரதம், சில குறிப்பிட்ட மாதம் மற்றும் கிழமையில் வரும் மிக அதிகமான சிறப்பை பெறுகிறது. மார்கழி அமாவாசை, 2025ம் ஆண்டில் டிசம்பர் 19ம் தேதியன்று வருகிறது.
கடந்த காலங்களில் செய்த பாவங்கள், தவறுகளில் இருந்து விடுபட்டு, பிறப்பு-இறப்பு இல்லாத மோட்ச நிலையை நாமும், நம்முடைய முன்னோர்களும் அடைவதற்கு மார்கழி மாத அமாவாசை மிக சிறப்புக்குரியதாகும். இந்த நாளில் குறிப்பிட்ட 5 பொருட்களை தானம் செய்வதால் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு, வெற்றிகள் ஆகியவை குவியும் என்பது நம்பிக்கை.
மார்கழி அமாவாசை அன்று இல்லாதவர்களுக்கு உணவு மற்றும் ஆடைகளை தானமாக அளிப்பதால் கர்மாக்கள் நீங்கும். குளிருக்கு இதம் தரும் ஆடைகள், போர்வை, சத்தான உணவு ஆகியவற்றை தேவைப்படுபவர்களுக்கு வழங்குவதால் வாழ்க்கையில் நம்மை துன்புறுத்தும் கஷ்டங்களில் இருந்து விடுபட்டு, அதிர்ஷ்டத்தை பெற முடியும். கெட்ட கர்மாக்களில் இருந்து விடுபடும் போது எதிர்மறையான விஷயங்களும் வாழ்க்கையில் இருந்து நீங்கும்.
அமாவாசை அன்று அரிசி, தானியங்கள் ஆகியவற்றை தானம் அளிப்பதால் செல்வ வளம், நிறைவான வாழ்க்கை அமையும். தானியங்கள் பெருக்கம் மற்றும் செல்வ வளத்தின் அடையாளமாகும். இவற்றை தானமாக அளிப்பதன் மூலம் வாழ்க்கையில் வளர்ச்சி என்பது ஏற்படும். அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்களை கோவில்களுக்கும், சேவை மையங்களுக்கும் தானமாக அளிக்கலாம்.
அமாவாசை அன்று நெய் மற்றும் எண்ணெய் விளக்குகளை தானமாக அளிக்கலாம். இது மிகப் பெரிய புண்ணியத்தை சேர்க்கும். விளக்கு என்பது அறிவை குறிப்பதாகும். கோவில்களுக்கு விளக்கேற்றுவதற்கு தேவையான நெய், எண்ணெய்யை வாங்கிக் கொடுக்கலாம். விளக்குகளும் வாங்கிக் கொடுக்கலாம். அதே போல் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சமையலுக்கு தேவையான எண்ணெய், நெய் ஆகியவற்றை வாங்கிக் கொடுக்கலாம். இது ஒளிமயமான வாழ்க்கையை நமக்கு அமைத்துக் கொடுக்கும்.
போர்வை, கம்பளி போன்றவற்றை அமாவாசை அன்று தானம் அளிப்பதால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். சாலையோரம் வசிப்பவர்கள், வயதானர்களுக்கு இவற்றை தானமாக அளிப்பது மிக மிக நல்லது. இதனால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். அதிர்ஷ்டம் பெருகும். செயல்களில் இருக்கும் தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். பாதுகாப்பான நிம்மதியான வாழ்க்கை அமையும்.
மார்கழி மாதம் முன்னோர்கள் முக்தி அடைவதற்கு மட்டுமின்றி சூரிய பகவானின் அருளையும் பெறுவதற்குரிய மாதமாகும். இந்த நாளில் கருப்பு எள் மற்றும் வெல்லம் ஆகியவற்றை தானம் செய்வது மிகவும் உயர்வான தானமாக கருதப்படுகிறது. கருப்பு எள்ளை தானமாக அளிப்பதால் சனியால் ஏற்படும் உடல் உபாதைகளில் இருந்து விடுபட முடியும். அதோடு முன்னோர்களின் ஆசிகளும் கிடைக்கும். அதே போல் வெல்லத்தை தானம் அளிப்பதால் ஜாதகத்தில் சூரியனின் நிலையை பலப்படுத்த முடியும். இதனால் மதிப்பு, மரியாதை உயரும். கெளரவ பதவிகள் கிடைக்கும்.