×

"போலீஸ் அடிச்சே கொன்னுட்டாங்க"... கைதி மரணத்தில் பகீர் கிளப்பிய பெற்றோர்

 

மானாமதுரையில் கைதி ஒருவர் காவல்துறைத் தாக்குதலால் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சிகிச்சையில் இருந்த விசாரணை கைதி உயிரிழந்த சம்பவத்தில் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மானாமதுரையில் கடந்த 6ம் தேதி அதிகாலையில் ஜெயபாண்டி, அழகர் ஆகிய இருவரையும் டூ வீலரில் வந்த இரண்டு பேர் கொண்ட கும்பல் வாளால் வெட்டி விட்டு தப்பியது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில்  திருப்புவனம் இன்ஸ்பெக்டர் திலீபன் தலைமையிலான போலீசார் மானாமதுரை கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த ஆகாஷ் டெலிசன் (26), குணா  ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதில் ஆகாசை கைது செய்த  போது 4 வழிச்சாலை மேலப்பசலை பாலத்த்தில் இருந்து குதித்ததாகவும், கால் முறிந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்  சிகிச்சையில் இருந்த ஆகாஷ் நள்ளிரவில் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தார் என போலீசார் தரப்பில் உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது. பெற்றோர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு சென்ற நிலையில் மானாமதுரையில் அவரது உறவினர்கள் மதுரை - பரமக்குடி 4 வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. ஆகாஷை தாக்கிய இன்ஸ்பெக்டர் திலீபன் உள்ளிட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்,  காலை பத்து மணி முதல் மறியல் நடந்து வருகிறது. கோட்டாட்சியர் ஜெபி கிரேசியா, ஏடிஎஸ்பி பிரான்சிஸ் பாண்டியன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் உறவினர்கள் சம்பந்தப்பட்ட போலீசாரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.