மேலாளரின் பாலியல் தொல்லை - அரளி விதை அரைத்து குடித்த துப்புரவு தொழிலாளி
திருவாரூரில் அழகிரி காலனியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வி. திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது இவருக்கு. திருவாரூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த ஐந்து வருடங்களாக பணியாளராக பணிபுரிந்து வரும் இவருக்கு ஒப்பந்த நிறுவனத்தின் மேனேஜர் முத்துச்செல்வன் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு தமிழ்செல்வி எத்தனையோ முறை எதிர்ப்பு தெரிவித்தும் மேனேஜர் விடாமல் அவருக்கு தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.
இதனால் பொறுமை இழந்த தமிழ்ச்செல்வி மேலிடத்தில் புகாராக எடுத்துச் சென்றிருக்கிறார். அதன்பின்னரும் தொல்லை தொடர்ந்திருக்கிறது.
நேற்றையதினம் வழக்கம் போல் வேலைக்கு சென்ற தமிழ்ச்செல்வி மடப்புரம் பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது திடீரென்று மயங்கி விழுந்திருக்கிறார். இதை பார்த்த சக ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் விஷமருந்தி இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது ஒப்பந்த நிறுவனமான சரம் நிறுவனத்தின் மேனேஜர் முத்துச்செல்வன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் பலமுறை உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. பிறகு கண்டித்தனர். ஆனாலும் அதன் பிறகு அவர் தொல்லை கொடுத்துவருகிறார். இன்றைக்கு நான் வேலையில் இருந்தபோது என்னை ஆபீசுக்கு வரவைத்து தகாத முறையில் நடந்துகொண்டார். அதனால்தான் விரக்தியில் அரளி விதையை அரைத்துக் குடித்து விட்டேன் என்று அழுதுகொண்டே சொல்லியிருக்கிறார் .
முத்துச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.