×

“பூட்டிய அறையில் ஆணும் பெண்ணும் இருந்தால் விபச்சாரமாக கருத முடியாது” – உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

1997ஆம் ஆண்டு, ஆயுதப்படை பிரிவில் சரவண பாபு என்பவர் காவலராகப் பணியில் சேர்ந்தார். 1998ஆம் ஆண்டு அவரது வீட்டிற்குள் அவரும் அதே பகுதியில் வசித்துவந்த இன்னொரு பெண் காவலர் இருந்ததாகக் கூறி இருவரையும் அறைக்குள் வைத்து அப்பகுதி மக்கள் பூட்டி விட்டனர். காவல் உயர் அதிகாரிகளுக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சரவண பாபுவிற்கும் அப்பெண் காவலருக்கும் இடையே முறையற்ற உறவு இருந்ததாகக் கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் சரவண பாபுவை பணிநீக்கம்
 

1997ஆம் ஆண்டு, ஆயுதப்படை பிரிவில் சரவண பாபு என்பவர் காவலராகப் பணியில் சேர்ந்தார். 1998ஆம் ஆண்டு அவரது வீட்டிற்குள் அவரும் அதே பகுதியில் வசித்துவந்த இன்னொரு பெண் காவலர் இருந்ததாகக் கூறி இருவரையும் அறைக்குள் வைத்து அப்பகுதி மக்கள் பூட்டி விட்டனர். காவல் உயர் அதிகாரிகளுக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சரவண பாபுவிற்கும் அப்பெண் காவலருக்கும் இடையே முறையற்ற உறவு இருந்ததாகக் கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பின்னர் சரவண பாபுவை பணிநீக்கம் செய்து ஆயுதப்பிரிவு ஐஜி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து சரவண பாபு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அம்மனுவில், “எனக்கும் பெண் காவலருக்கும் இடையே எந்த தகாத உறவும் இல்லை. என்னுடைய வீட்டில் இருந்த அவரது வீட்டுச் சாவியை வாங்குவதற்காகவே அவர் வந்தார். அவர் வீட்டுக்கு வந்ததும் வீட்டுக் கதவை யாரோ வெளியிலிருந்து பூட்டி விட்டனர்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இவ்வழக்கு தொடர்பான விசாரணை 20 ஆண்டுக்கும் மேலாக நடைபெற்றுவந்தது. விசாரணையில், சரவணபாபுக்காக ஆஜரான வழக்கறிஞர், “சரவணபாபுவின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் தனது தோழியைப் பார்க்கவே பெண் காவலர் அங்கு வந்தார். தோழி இல்லாததால், பக்கத்து வீட்டில் சாவியைக் கொடுத்துவிட்டு போனாரா என்பதைக் கேட்கவே சரவணபாபு வீட்டிற்கு வந்தார். இருவர் மீதும் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த நேரத்தில் வேறு யாரோ ஒருவர் வெளியில் இருந்து வீட்டைப் பூட்டி விட்டனர். அதிகாரிகள் வந்தபோது இதுகுறித்து விளக்கமளித்தும், அதனைப் பொருட்படுத்தாமல் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என்று வாதிட்டார்.

இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுரேஷ்குமார், “மனுதாரர் கூறுவதையே காவல் துறையினரின் சாட்சியங்களும் கூறுகின்றன. சரவண பாபுவும், சம்பந்தப்பட்ட பெண் காவலரும் தவறான நோக்கத்தில் தான் வீட்டுக்குள் இருந்தனர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இருவரும் குறிப்பிட்ட நேரம் ஒரே வீட்டில் இருந்தனர் என்பதால், அவர்கள் தவறான நோக்கத்துடன் தான் இருந்தனர் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிடுகிறேன். அவர் பணியில் சேர தகுதியானவர்.

பூட்டப்பட்ட ஒரு அறையில் ஆணும், பெண்ணும் இருந்தால் அதை விபச்சாரமாகக் கருத முடியாது. சமூகத்தில் பல கருத்துக்கள் இருக்கலாம். அதை வைத்து யார் மீதும் ஒழுங்கு நடவடிக்கையோ, தண்டனையோ கொடுக்க முடியாது” என்று தனது உத்தரவில் கூறியிருக்கிறார். கிட்டத்தட்ட 23 ஆண்டுகளாக நிலுவையிலிருந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்திருக்கிறது. திருமணமாகாத ஆணும் பெண்ணும் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்வது எப்படி குற்றமாக கருத முடியாதோ அதேபோல், இருவரும் ஒரே விடுதியில் ஒரே அறையில் தங்குவதும் குற்றமாகாது என்று ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.