×

ஓரணியில் தமிழ்நாடு:  பொதுமக்களிடம் ஓடிபி பெற தடை -  ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு..!!

 


ஓரணியில் தமிழ்நாடு என்னும் திமுக உறுப்பினர் சேர்க்கை பரப்புரையின்போது , பொதுமக்களிடமிருந்து ஓடிபி பெறுவதற்கு  உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை தடை விதித்துள்ளது.  

திமுக ஓரணியில் தமிழ்நாடு என்னும் உறுப்பினர் சேர்க்கை பரப்புரையை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது. இந்த பரப்புரையில்  திமுகவினர் வீடு வீடாகச் சென்று மக்களிடம் பேசி, வாக்களர் அடை விவரங்களை பெற்றுக்கொண்டு செல்போன் எண் மற்றும் ஓடிபி மூலம் உறுப்பினர்களை பதிவு செய்து வருகின்றனர்.  இதனை எதிர்த்து  உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்  வழக்கு தொடரப்பட்டது, இந்த  வழக்கை விசாரித்த  நீதிபதிகள், பொதுமக்களிடம் ஒடிபி பெற தடை விதித்து உத்தரவிட்டனர்.  

ஓடிபி தகவல்களை பொதுமக்கள் யாருக்கும் வழங்க வேண்டாம் என காவல்துறை எச்சரித்து வரும் நிலையில், எதற்காக  ஓடிபி  கேட்கிறார்கள் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், ஆதார் உள்ளிட விவரங்களை சேகரிக்கும் நிறுவனம் அதனை விற்பனை செய்தால் என்ன செய்வது? என்றும், சேகரிக்கப்படும் விவரங்கள் எவ்வாறு கையாளப்படுகிறது என்பது குறித்த விவரங்கள் இல்லை என்றும் குறிப்பிட்டனர். 

அத்துடன்  டிஜிட்டல் முறையில்  தனிநபர் தரவுகள் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதேபோல்  இந்திய தேர்தல் ஆணையமும் பதிலளிக்குமாறு  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.