மதுரை ஆதீனம் காணொலி மூலம் ஆஜராக அனுமதி மறுப்பு
மதுரை ஆதீனம் காணொலி மூலம் ஆஜராக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் 6வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மதுரை ஆதினம் மதுரையில் இருந்து சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை அருகே சென்றப்பொது மதுரை ஆதினம் கார் மீது மற்றொரு கார் மோதியது. இந்த விபத்தில் மதுரை ஆதீனம் எந்தவித காயமுமின்றி அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்பு விபத்துக்குள்ளான காரிலேயே அவர் சென்னை சென்றார். தன்னை கொலை செய்ய சதி என மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்தார். மேலும் குறிப்பிட்ட மதத்தினர் மீது மதுரை ஆதீனத்தின் கார் ஓட்டுநர் குற்றம்சாட்டி இருந்தார். இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது இது தற்செயலாக நிகழ்ந்த விபத்து என்பதும் மதுரை ஆதீனத்தை கொலை செய்ய முயற்சிக்கவில்லை என்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜலிங்கம் இரு மதத்தவர்கள் இடையே வெறுப்புணர்வு, பகை உணர்வை தூண்டும் வகையில் பேசியதாக புகார் அளித்தார்.
இரு பிரிவினர் இடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் மதுரை ஆதீனம் இன்று ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பினர். மதுரை ஆதீனம் சார்பில் காணொலி காட்சி மூலமாக விசாரணைக்கு ஆஜராவதாக காவல்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் காணொலி காட்சி மூலமாக விசாரணைக்கு ஆஜராக அனுமதி மறுத்த போலீசார் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.