×

நடிகர் மன்சூர் அலிகானுக்கு ₹1 லட்சம் அபராதம் - உயர்நீதிமன்றம் அதிரடி 

 

நடிகர் மன்சூர் அலிகானுக்கு ₹1 லட்சம் அபராதம் விதித்து அவரது மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


லியோ திரைப்படத்தில் நடிகர் த்ரிஷாவை கற்பழிப்பது போன்ற காட்சி இடம்பெறவில்லை என நடிகர் மன்சூர் அலிகான் கூறிய கருத்து பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இந்த கருத்துக்கு நடிகை த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இதேபோல் லியோ திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட திரைபிரபலங்கள் பலரும் மன்சூர் அலிகானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளில் நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  இந்த  விவகாரம் பூதாகரமான நிலையில்,  த்ரிஷாவிடம் நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கோரினார்.

இதை தொடர்ந்து இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகானுக்கு எதிராக கருத்து தெரிவித்த நடிகை த்ரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் மீது நடிகர் மன்சூர் அலிகான் மீது மான நஷ்ட வழக்கு, நஷ்டஈடு வழக்கு, கிரிமினல், பொது அமைதியை கெடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடர உள்ளதாக அறிவித்தார். அத்துடன் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக நடிகைகள் திரிஷா, குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் மீது மானநஷ்ட ஈடு வழக்க தொடர அனுமதி கோரி நடிகர் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு ₹1 லட்சம் அபராதம் விதித்து அவரது மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். அபராதத் தொகையை இரண்டு வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும்.  பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது மனித இயல்பு. நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கத்திற்காகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.