கல்வராயன் மலைக்கு முதல்வர் நேரில் சென்று பார்வையிட வேண்டும் - உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்..
கல்வராயன் மலைப்பகுதி மக்களை முதலமைச்சர் நேரில் சென்று பார்வையிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, கல்வராயன் மலைப்பகுதி மக்கள் மேம்பாடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அதன்படி இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வும் விசாரித்து வந்தது. தொடர்ந்து இன்று (புதன்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர்களின் அறிக்கைகள் தயாராகி வருவதாகவும், நாளை மறுநாள் அந்த அறிக்கையை சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூலை 26-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
அப்போது பேசிய நீதிபதிகள், கள்ளச் சாராயம் மட்டுமே அந்த பகுதி மக்களின் ஒரே ஆதாரமாக உள்ள நிலையில் அதனை ஒழிக்கும் பட்சத்தில் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், கல்வராயன் மலைப் பகுதியாக உள்ளதால் அந்தப் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தினர். மேலும், அந்த பகுதி மக்களுக்கு உடனடி தேவையான மருத்துவம், கல்வி, போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என்றும் கூறினார். அதுமட்டுமின்றி, அந்தப் பகுதிக்கு தாங்கள் செல்வதை விட, தமிழக முதலமைச்சரோ அல்லது அமைச்சர் உதயநிதியோ, ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சருடன் சென்று பார்வையிட்டால் அந்தப் பகுதி மக்களுக்கு ஏதேனும் நன்மை கிடைக்கும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.