×

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடமையாக்கியது செல்லாது - ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு!

 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டனிலுள்ள வேதா இல்லம் அதிமுக ஆட்சியில் அரசுடமையாக்கப்பட்டது. வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் எனவும் அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு வேதா இல்லமும் அங்குள்ள அசையும் சொத்துக்களும் அரசுடமையாக்கப்பட்டன. இதை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்  மற்றும் மகள் தீபா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

மேலும் வேதா நிலையத்துக்கு 67 கோடியே 90 லட்சம் ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தையும் நீதிபதி சேஷசாயி விசாரித்து வந்தார். முந்தைய விசாரணையில் தீபா தரப்பில், தனிநபர் சொத்துக்களைக் கையகப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரமில்லை எனவும் வேதா நிலையத்தை அரசுடமையாக்கி பிறப்பித்த சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சேஷசாயி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார். இச்சூழலில் இந்த வழக்குகள் மீதான தீர்ப்பை இன்று வழங்கியுள்ளார். அதில், ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுமையாக்கியது செல்லாது எனவும் ஆகவே அரசு ஒரு வாரத்திற்குள் தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளார். ஏற்கெனவே ஜெயலலிதாவிற்கு மெரினாவில் பீனிக்ஸ் நினைவிடம் இருக்கிறது என்று குறிப்பிட்ட நீதிபதி, எதற்கு வேதா இல்லத்தையும் நினைவிடமாக மாற்ற வேண்டும் என்று கேள்வியெழுப்பினார்.