×

கொரோனாவால் இறந்த டாக்டர் சைமனின் இறுதி ஆசை நிறைவேறியது… போராடி வழக்கில் வெற்றிபெற்றார் மனைவி!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் உடலை வேலங்காடு மயானத்திலிருந்து எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மீண்டும் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்த நரம்பியல் மருத்துவர் சைமன் ஹெர்குலிஸின் உடலை, கடந்த ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டம் மற்றும் வேலாங்காடு பகுதிகளில் அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அவரின் உடலை எடுத்துவந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் உடலை வேலங்காடு மயானத்திலிருந்து எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மீண்டும் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்த நரம்பியல் மருத்துவர் சைமன் ஹெர்குலிஸின் உடலை, கடந்த ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டம் மற்றும் வேலாங்காடு பகுதிகளில் அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அவரின் உடலை எடுத்துவந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் படுகாயமடைந்தனர். பின், மருத்துவர் சைமனின் உடல், வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சைமன் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக டி.பி.சத்திரம், அண்ணா நகர் கவால் நிலையங்களில் வழக்கு பதியப்பட்டு, 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட சைமனின் உடலைத் தோண்டி எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யக் கோரி அவரது மனைவி ஆனந்தி, சென்னை மாநகராட்சியிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அதைப் பரிசீலித்த சென்னை மாநகராட்சி ஆணையர், ஆனந்தியின் கோரிக்கையை நிராகரித்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மருத்துவர் சைமனின் மனைவி ஆனந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்துள்ள நீதிபதி அப்துல் குத்தூஸ், வேலங்காடு மயானத்தில் இருந்து மருத்துவர் சைமன் உடலை எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்திலேயே மீண்டும் அடக்கம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். உரிய நடைமுறைகள் பின்பற்றப்படும், போலீஸ் பாதுகாப்பு தரப்பட வேண்டும். வீடியோ பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளையும் விதித்துள்ளார்.

தனது முன்னோர்களின் உடல் அடக்கம் செய்த கல்லறை தோட்டத்தில் தன்னையும் அடக்கம் செய்ய வேண்டும் என்பதே சைமனின் ஆசை. இதனை அவரது மனைவி கூறியிருந்தார். அதன் காரணமாகவே வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கில் வெற்றியும் பெற்றுவிட்டார். சைமனின் இறுதி ஆசையும் நிறைவேறியிருக்கிறது.