×

"கருணாநிதி சிலை வைக்க அனுமதி பெறப்பட்டதா?" - அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி!

 

திருப்பூர் ரயில் நிலையம் அருகே மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் சிலை வைக்க அனுமதி பெறப்பட்டுள்ளதா என தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொது இடங்களில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட சிலைகளை அகற்ற வேண்டுமெனவும், அனுமதி பெற்ற சிலைகளை தலைவர்களின் சிலை பூங்கா அமைத்து பராமரிக்கவும் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடந்த அக்டோபர் மாதம் உத்தரவிட்டிருந்தார். 

இந்த நிலையில் திருப்பூரை சேர்ந்த ஏ.திருமுருக தினேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "திருப்பூர் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் அருகே விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதியில் கருணாநிதியின் சிலை வைக்க திட்டமிடப்படுகிறது. இது நீதிமன்ற உத்தரவுகளுக்கு முரணானது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இக்கடிதத்தை ஏற்கனவே உத்தரவு பிறப்பித்த வழக்குடன் இணைத்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டார் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம்.

அதற்குப் பின் சராமரியாக கேள்வியெழுப்பினார். நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக பொது இடத்தில் சிலை வைக்க யாரும் முடிவெடுத்துள்ளார்களா, சிலை வைக்க அனுமதி பெறப்பட்டுள்ளதா என தமிழக உள்துறை செயலாளர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இன்று விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.